கோலாலம்பூர்:
இங்குள்ள கோம்பாக் செத்யா மக்கள் வீட்டுவசதி குடியிருப்பில் (பிபிஆர்) எட்டு கார்கள் மற்றும் 53 மோட்டார் சைக்கிள்கள் திங்கள்கிழமை (ஜூலை 6) அதிகாலை தீயில் கருகின.
பல தீயணைப்பு இயந்திரங்கள் மற்றும் பிற மீட்பு வாகனங்களில் 24 தீயணைப்பு வீரர்கள் அதிகாலை 5.05 மணியளவில் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தீயணைப்பு மற்றும் மீட்பு துறை நடவடிக்கை தலைவர் ஜைத் ஜைனல் தெரிவித்தார்.
தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்தபோது தீ உச்சத்தில் இருந்தது. மோட்டார் சைக்கிள்கள் கிட்டத்தட்ட 100% தீயில் அழிந்திருந்தன. அதே நேரத்தில் கார்கள் 60 முதல் 80% வரை எரிந்திருந்தன என்று அவரை தொடர்பு கொண்டபோது கூறினார்.
அதிகாலை 5.25 மணியளவில் அவர்கள் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்து அதிகாலை 5.47 மணிக்கு அணைத்தனர். தீ ஏற்பட்டதற்கான காரணம் குறித்து நாங்கள் இன்னும் விசாரித்து வருகிறோம் என்று அவர் கூறினார்.