பேரிடர் காலங்களில் சென்னை மாநகராட்சி சிறப்பாக செயல்பட முடியாமல் திணறும் நிலையில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெய லலிதா சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் அறிவிக்க திட்ட மிட்டிருந்தபடி, மாநகராட்சி பொது சுகாதாரத் துறையை, மாநில பொது சுகாதாரத் துறையுடன் இணைக்க வேண்டும் என்று பொதுமக்களும், பொது சுகாதார வல்லுநர்களும் வலியுறுத்தியுள்ளனர்.
நாட்டிலேயே மிகப் பழமையான மாநகராட்சியாக சென்னை மாநகராட்சி உள்ளது. இது கடந்த 1688-ம் ஆண்டு நிறுவப்பட்டது. இந்தியாவிலேயே இங்குதான் 1939-ம் ஆண்டு மெட்ராஸ் பொது சுகாதார சட்டம் இயற்றப்பட்டது. தமிழ்நாடு மாநிலம் உருவானபோது மாநகராட்சி பொது சுகாதாரத் துறை அதிகாரிகள், மாநில பொது சுகாதாரத் துறை அதிகாரிகளைவிட மூத்தவர்களாக இருந்தனர். பின்னாளில் அனைத்தும் தலைகீழாக மாறியது. மாநகராட்சி பொது சுகாதாரத் துறை ஐஏஎஸ் அதிகாரிகளின் கையில் சிக்கி பேரிடர்களை எதிர்கொள்ள முடியாத நிலையில் உள்ளது.
கடந்த மார்ச் – ஏப்ரல் மாதங்களில் சென்னையில் கொரோனா தொற்று அதிகமாக இருந்தது. தொடக்கத்தில் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களும், வெளி மாநிலங்களில் இருந்து வந்தவர் களும் மட்டுமே இதில் பாதிக்கப்பட்டனர். இவர்களை தனிமைப் படுத்துவதில் சென்னை மாநகராட்சி முதல் தோல்வியை சந்தித்தது. தொற்று அதிகரித்த பல இடங்களில் மாநகராட்சி சீல் வைத்தாலும், அப்பகுதிக்குள் சென்று வந்தகளப் பணியாளர்களை தனியாக தங்க வைக்காமல், அவர்களை அவர்களின் வீடுகளுக்கு அனுப்பியதால் களப்பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.
கொரோனா தொற்று உள்ளவர்களை கண்டுபிடிப்பது, அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை தேடிப் பிடிப்பதில் சுகாதார ஆய்வாளர்களின் பங்கு முக்கியம். மாநகராட்சியில் உள்ள 232 சுகாதார ஆய்வாளர் பணியிடங்களில், 102 பேர் மட்டுமே உள்ளனர். மண்டல சுகாதார அலுவலர் மற்றும் பல் வேறு சுகாதார பணியாளர்கள் பணியிடங்களும் காலியாக உள்ளன. சென்னையில் கொரோனாவை கட்டுப் படுத்த முடியாததற்கு இதுவும் ஒரு காரணம்.
இதேபோன்று கடந்த 2015-ம் ஆண்டு பெருவெள்ளத்தால் சென்னை பாதிக்கப்பட்டபோது, மருத்துவ சேவைகளை வழங்க போதிய சுகாதார அலுவலர்களின்றி சென்னை மாநகராட்சி திணறியது. அப்போதும் மாநில பொதுசுகாதாரத் துறை களமிறங்கி நோய் தொற்றுகளில் இருந்து மாநகரை மீட்டது. இதை அறிந்த அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, மாநகராட்சி பொது சுகாதாரத் துறையை மாநில பொது சுகாதாரத் துறையுடன் இணைக்க முடிவு செய்தார். அது தொடர்பாக சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் அறிவிக்க திட்டமிட்டிருந்தார். பின்னர் அவரது உடல் நலக்குறைவு, மரணம் போன்ற காரணங்களால் இந்த திட்டம் அமல்படுத்தப்படவில்லை. ஆனால் கொரோனா வடிவில், தமிழக அரசுக்கு தற்போது நினைவூட்டல் செய்துள்ளது.
இதுதொடர்பாக பொது சுகாதார வல்லுநர்கள் கூறியதாவது:
மாநில சுகாதாரத் துறையின் கட்டுப்பாட்டில் சென்னையில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைகளில் போதிய மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் உள்ளனர். ஆனால் அதே சென்னையில் மாநகராட்சியின் கட்டுப் பாட்டில் உள்ள மருத்துவமனைகள், சுகாதார நிலையங்களில் மருத்துவர்கள், பணியாளர்கள் இடங்கள் காலியாக உள்ளன. சுமார் 1 கோடி மக்கள்தொகை உள்ள நிலையில், குறைந்தது 5 பொது சுகாதார துணை இயக்குநர்கள், 5 இணை இயக்குநர்கள் இருந்தால் மட்டுமே சென்னையில் சுகாதாரத்தை பாதுகாக்க முடியும். ஆனால் மாநகராட்சி பொது சுகாதாரத் துறை ஐஏஎஸ் அதிகாரிகளின் கீழ் சிக்கியுள்ளது. மாநகராட்சி ஆணையர், மாநில பொதுசுகாதாரத் துறை செயலர் ஆகியோரில் யார் பெரியவர் என்ற சர்ச்சையும் அவ்வப்போது எழுகிறது. இதை அறிந்துதான் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, மாநகராட்சி பொது சுகாதாரத் துறையை, மாநில சுகாதாரத் துறையுடன் இணைக்க முயற்சித்தார். அவரது விருப்பத்தை இந்த அரசு நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக சுகாதாரத் துறை உயரதிகாரிகளிடம் கேட்ட போது, “மாநகராட்சி பொது சுகாதாரத் துறையை, மாநில சுகாதாரத் துறையுடன் இணைக்கும் பணிகளை தொடங்க இருக்கிறோம்” என்றனர்.