பாகிஸ்தான் ஆதரவுடன் செயல்படும், 18 பயங்கரவாதிகளை, தனி நபர் பயங்கரவாதிகளாக, சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ், மத்திய அரசு அறிவித்துள்ளது.பயங்கரவாதத்துடன் தொடர்புடைய தனி நபரை பயங்கரவாதியாக அறிவித்து, அவர்களது சொத்துக்களை பறிமுதல் செய்து, நடவடிக்கை எடுக்கும் வகையில், சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டது. இதன்படி, பாகிஸ்தானில் உள்ள மசூத் அசார், ஹபீஸ் சயீது, தாவூத் இப்ராஹிம், ஜகி உர், ரஹ்மான் லக்வி ஆகியோர், தனி நபர் பயங்கரவாதிகளாக அறிவிக்கப்பட்டனர்.
இந்நிலையில், பாகிஸ்தான் ஆதரவுடன் செயல்படும், 18 பயங்கரவாதிகளை, தனி நபர் பயங்கரவாதிகளாக மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று அறிவித்தது.பாக்., உளவு அமைப்பான, ஐ.எஸ்.ஐ.,யுடன் நெருங்கிய தொடர்பு வைத்துள்ள சஜித் மிர், ஹிஸ்புல் முஜாஹிதின் தலைவர் சையத் சலாஹுதீன், தாவூத் இப்ராஹிமின் நெருங்கிய கூட்டாளி சோட்டா ஷகீல் உட்பட, 18 பேர், இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.