அதில் ஆஸ்திரேலிய ராணுவ சீருடையில் இருக்கும் ஒரு நபர் குழந்தையின் கழுத்தில் ரத்தக்கரை படிந்த கத்தியை வைத்து இருக்கும் வகையில் அந்த படம் இருந்தது.
மேலும் “ஆப்கானிஸ்தான் பொதுமக்கள் மற்றும் கைதிகளை ஆஸ்திரேலியா படையினர் கொலை செய்ததில் அதிர்ச்சியடைந்தோம். இது போன்ற செயல்களை நாங்கள் கடுமையாக கண்டிக்கிறோம். அவர் களை பொறுப்புக்கூற வைக்க அழைப்பு விடுக்கின்றோம்” எனவும் அவர் பதிவிட்டிருந்தார்.
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான அமெரிக்க போரில், ஆஸ்திரேலிய அதிரடி படை வீரர்கள் சட்டத்துக்கு புறம்பான விதத்தில் 39 பேரை கொன்றது போர்க்குற்றம் என ஆஸ்திரேலிய ராணுவம் அறிவித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், சீனா வெளியிட்ட இந்த புகைப்படம் கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இந்த புகைப்படம் போலியானது என்று ஆஸ்திரேலியா கூறுகிறது.
இதுதொடர்பாக பேசிய ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன், “பழிவாங்கும் எண்ணத்துடன் போலியான, மூர்க்கத்தனமான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்கள். இந்த போலி புகைப்படம் எங்கள் படைகள் மீது மோசமான கறையை படிய செய்கிறது. இந்த தவறான பதிவுக்காக சீனா வெட்கப்பட வேண்டும். மேலும் இந்த விவகாரத்தில் சீனா ஆஸ்திரேலியாவிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்” என கூறினார்.
இந்த நிலையில் இந்த விவகாரத்தில் ஆஸ்திரேலியாவுடன் சேர்ந்து நியூசிலாந்து சீனாவுக்கு எதிராக குரல் எழுப்பியுள்ளது. அந்த நாட்டின் பிரதமர் ஜெசிந்தா பத்திரிகையாளர்களிடம் இதுபற்றி கூறுகையில் “இது உண்மைக்கு மாறான ஒரு படம். அது சரியாக இல்லை. இது போன்ற படங்கள் பயன்படுத்தப்படும் போது எங்கள் கொள்கை ரீதியான நிலைப்பாட்டை கருத்தில் கொண்டு நாங்கள் அந்த கவலைகளை எழுப்புவோம். கண்டனத்தை பதிவு செய்வோம். நாங்கள் அதை நேரடியாக செய்வோம் என கூறினார்.
ஆனால் சீனா இந்த விவகாரத்தில் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளவில்லை. மன்னிப்பு கேட்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளதோடு, தங்கள் மீது குற்றச்சாட்டுகளை வைத்து பொதுமக்களின் கவனத்தை திசை திருப்ப ஆஸ்திரேலியா முயற்சிப்பதாகவும் சீனா குற்றம் சாட்டியுள்ளது.
இதுகுறித்து ஆஸ்திரேலியாவில் உள்ள சீன தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சீனா மீதான குற்றச்சாட்டுகள் 2 நோக்கங்களுக்காகவே செய்யப்படுகின்றன.