புதுடெல்லி:
தற்போதைய பாராளுமன்ற கட்டடம் கட்டப்பட்டு 100 ஆண்டுகள் நிறைவடைய உள்ளது. அதில் போதிய இடவசதியும் இல்லை.
அதன்படி, புதிய பாராளுமன்ற கட்டடத்துக்கு இன்று (வியாழக்கிழமை) அடிக்கல் நாட்டு விழா நடைபெறுகிறது. பிரதமர் மோடி, அடிக்கல் நாட்டி வைக்கிறார். பூமி பூஜையையும் நடத்தி வைக்கிறார்.
மத்திய மந்திரிகள், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், பல்வேறு நாடுகளின் தூதர்கள் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். சில மாநிலங்களின் கவர்னர்கள், முதல்-மந்திரிகள் ஆகியோர் காணொலி காட்சி மூலம் பங்கேற்கிறார்கள்.
ரூ.971 கோடி செலவில் புதிய நாடாளுமன்ற கட்டடம் கட்டப்படுகிறது. 2022- ஆம் ஆண்டுக்குள் கட்டுமான பணி நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே ஆண்டில் 75ஆவது சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. அதற்குள் புதிய பாராளுமன்றம் தயாராகி விடும் என்று தெரிகிறது.
அதைத்தொடர்ந்து தற்போதைய பாராளுமன்ற கட்டடம் தொல்லியல் சொத்தாக பராமரிக்கப்படும். பாராளுமன்றம் தொடர்பான நிகழ்ச்சிகள் நடத்த பயன்படுத்தப்படும்.
டாடா நிறுவனம், புதிய பாராளுமன்ற கட்டுமான பணிகளை மேற்கொள்கிறது. 64 ஆயிரத்து 500 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்படுகிறது.
நாட்டின் ஜனநாயக பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வகையில் பிரமாண்ட அரசியல் சட்ட அரங்கம், எம்.பி.க்கள் ஓய்வு எடுக்கும் பகுதி, நூலகம், நிலைக்குழுக்களின் அறைகள், சாப்பிடும் பகுதி, வாகன நிறுத்துமிடம் ஆகியவை இடம்பெற்றிருக்கும்.
மக்களவையில் 888 இருக்கை வசதிகளும், மாநிலங்களவையில் 384 இருக்கை வசதிகளும் இருக்கும்.
பாராளுமன்ற கூட்டு கூட்டத்தின்போது, மக்களவையில் 1,224 பேரை அமர வைப்பதற்கான வசதிகள் இடம்பெற்று இருக்கும்.