விரோத மனப்பான்மை அமைதியை ஏற்படுத்த உதவாது’ என இந்தியா-ஜப்பான் கலந்துரையாடல் கூட்டத்தில் பிரதமர் மோடி கூறினார்.
இந்தியா ஜப்பான் இடையே 6 ஆவது கலந்துரையாடல் கூட்டம் வீடியோ கான்பரன்ஸ் மூலம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பிரதமர் நரேந்திரமோடி கலந்து கொண்டு பேசினார்.
கடந்தகாலங்களில் மனித நேயமானது பெரும்பாலும் ஒத்துழைப்புக்கு மாறாக மோதல் போக்கையே பின்பற்றி வந்துள்ளது. ஏகாதிபத்தியத்தில் இருந்து உலகப்போர்கள் வரை, ஆயுத போட்டியில் இருந்து விண்வெளி போட்டி வரை நாம் பேச்சுவார்த்தைகள் மேற்கொண்டாலும், அவை ஒருவரை ஒருவர் கீழே தள்ளுவதாகவே அமைந்தன.
ஆனால், தற்போது நாம் ஒருங்கிணைந்து செயல்படுகிறோம். விரோத மனப்பான்மை அமைதியை ஏற்படுத்த ஒருபோதும் உதவாது. சர்வதேச வளர்ச்சி குறித்த விவாதங்கள் ஒரு சிலருக்கு இடையே மட்டுமே நடத்த முடியாது. அது குறித்த அட்டவணையானது மிகப்பெரியதாக இருக்க வேண்டும். அதன் நிகழ்ச்சி நிரல் பரந்ததாக இருக்க வேண்டும். வளர்ச்சி முறைகள் மனிதனை மையமாக கொண்ட அணுகுமுறையை பின்பற்ற வேண்டும். கொள்கைகளின் சாரம்சமாக மனித நேயம் இருக்க வேண்டும். இயற்கையோடு இணைந்து வாழவேண்டும் என்று கூறினார்.
இந்தியா- வியட்நாம் இடையே வீடியோ கலந்துரையாடல் மூலமாக உச்சிமாநாடு நேற்று நடைபெற்றது. வியட்நாம் பிரதமர் என்குயென்சுவானுடன், பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இருநாட்டுக்கும் இடையே பாதுகாப்பு, அணுசக்தி, பெட்ரோ கெமிக்கல்ஸ், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, புற்றுநோய் சிகிச்சை உள்ளிட்டவை தொடர்பான 7 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
பிரதமர் மோடி தனது உரையில் இந்தியாவில் புத்தமத இலக்கிய நூலகம் அமைக்கப்பட இருப்பதாகவும் தெரிவித்தார். இது குறித்து அவர் பேசுகையில், ‘‘பாரம்பரிய புத்த இலக்கியங்கள் போதனைகளை பற்றி மக்கள் அறிந்து கொள்வதற்காக நூலகம் ஒன்றை இந்தியாவில் அமைக்க வேண்டும். அத்தகைய வசதியை இந்தியாவில் ஏற்படுத்துவது மகிழ்ச்சிஅளிக்கின்றது. இதற்கு தேவையான அனைத்து வசதிகளையும் இந்தியா வழங்கும். புத்த இலக்கியங்களின் டிஜிட்டல் நகல்களை பல்வேறு நாடுகளில் இருந்தும் சேகரிப்போம். அவை மொழிபெயர்ப்பு செய்து புத்தமதத்தை சேர்ந்த அனைத்து மடாதிபதிகள், அறிஞர்களுக்கு இலவசமாக கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.