சனா:
ஏமன் நாட்டில் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் அரசுப்படையினருக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நடைபெற்று வருகிறது.
அரசுப்படையினருக்கு சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படைகள் ஆதரவு அளிக்கிறது. அதேவேளை ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரான் ஆதரவு அளித்து வருகிறது.
இந்நிலையில், சவுதி ஆதரவுடன் புதிதாக அமைந்துள்ள ஏமன் அரசின் அமைச்சரவையில் இடம் பெற்றவர்கள் விமானம் அந்நாட்டின் எடன் விமான நிலையத்திற்கு நேற்று வந்திறங்கினர்.
அமைச்சரவை உறுப்பினர்கள் வந்திறங்கிய சில நிமிடங்களில் விமான நிலையத்தில் சக்திவாய்ந்த குண்டு வெடித்தது.
இந்த குண்டுவெடிப்பு தாக்குதலில் 10 பேர் உயிரிழந்ததாக முதல்கட்ட தகவல்கள் வந்தது. ஆனால், தற்போது அந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
விமான நிலைய குண்டுவெடிப்பு தாக்குதல் சம்பவத்தில் இதுவரை 26 பேர் உயிரிழந்துள்ளதாக ஏமன் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் 50 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
புதிதாக அமைந்துள்ள அரசை சீர்குலையச்செய்யவே ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இந்த தககுதலை நடத்தியுள்ளதாக ஏமன் அரசு குற்றம் சுமத்தியுள்ளது.