தமிழக சட்டசபை தேர்தலை யொட்டி, மக்கள் நீதி மையத்தின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் தமிழகம் முழுவதும் தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்.
இதனிடையே, கமல்ஹாசன் தேர்தல் பிரசாரத்தில், திமுகவைவிட ஆளும் அதிமுக அரசு மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். அவ்வப்போது ட்விட்டரிலும் தனது கருத்தை பதிவிட்டு வருகிறார்.
இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், கோவை மக்களின் வரவேற்பு வழக்கமான ஆர்ப்பாட்டத்தோடு இருக்க, அரசின் வரவேற்பு ஆபாசமானதாக உள்ளது. போலீஸை வைத்தே கொடிக்கம்பங்களை வெட்டி வீழ்த்துவது, பேனர்களைச் சிதைப்பது, போஸ்டர்களைக் கிழிப்பது தொடர்கிறது.
கொங்குமண்டலம் அதிமுகவின் கோட்டை என்கிற மாயை தகர்வது ஆளுங்கட்சிக்குத் தெரிந்துவிட்டதோ? என தெரிவித்துள்ளார்.
மேலும், காவல் துறைக்குப் பல சோலிகள் இருக்கின்றன. நான் செல்லும் இடமெல்லாம் கொடிகளை அகற்ற, போஸ்டரைக் கிழிக்க, பேனர்களை அவிழ்க்க அவர்களைப் பயன்படுத்த வேண்டியதில்லை மாண்புமிகுக்களே…’என குறிப்பிட்டுள்ளார். நடிகர் கமல்ஹாசன் பேச்சு அதிமுகவினர் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.