புதுடெல்லி:
டிஜிட்டல் முறையில் பரிமாற்றம் செய்யக்கூடிய பிட்காயின் போன்ற மெய்நிகர் நாணயங்களை ஒழுங்குபடுத்த நமது நாட்டில் தற்போது உள்ள சட்டங்கள் போதுமானதாக இல்லை.
இதுதொடர்பாக நாடாளுமன்ற மாநிலங்களவையில் எழுப்பிய கேள்விக்கு நிதித்துறை ராஜாங்க மந்திரி அனுராக் தாக்குர் நேற்று பதில் அளித்தார்.
அப்போது அவர், “ஒழுங்குமுறை அமைப்புகளான ரிசர்வ் வங்கி, பங்குச்சந்தை மற்றும் பரிமாற்ற வாரியம் (செபி) ஆகியவை மெய்நிகர் நாணயங்களை ஒழுங்குபடுத்த எந்த சட்ட கட்டமைப்பும் இல்லை.
ஏனென்றால் அவை நாணயங்கள், சொத்துகள், பத்திரங்கள் அல்லது அடையாளம் காணக்கூடிய பயனாளிகளால் வழங்கப்படும் பொருட்கள் அல்ல. தற்போதைய சட்டங்கள் அவற்றை கையாள போதுமானதாக இல்லை.
இது குறித்து ஆராய அமைச்சகங்களுக்கு இடையேயான குழு அமைத்து, அறிக்கை பெறப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் ஒரு மசோதா இறுதி செய்யப்படுகிறது. அது விரைவில் மத்திய மந்திரிசபைக்கு அனுப்பி வைக்கப்படும். பின்னர் அந்த மசோதா தாக்கல் செய்யப்படும் என கூறினார்.