சிவப்பு மண்டல மாநிலங்களுக்கு முன்னுரிமை
கோலாலம்பூர்-
கோவிட்-19 வைரஸ் தொற்று காரணமாக சிவப்பு மண்டலமாக உருமாறியுள்ள மாநிலங்களுக்கு அஸ்ட்ராஸெனேகா வகை தடுப்பூசி வழங்கப்படுவதில் முன்னுரிமை அளிக்கப்படும் என அறிவியல், தொழில்நுட்ப, புத்தாக்கத்துறை அமைச்சர் கைரி ஜமாலுடின் தெரிவித்தார்.
கோலாலம்பூர், சிலாங்கூர் பகுதிகளில் இந்தத் தடுப்பூசி போடுவது நேற்று தொடங்கப்பட்ட வேளையில் சிவப்பு மண்டல மாநிலங்களிலும் தன்னார்வ முறையில் இத்தடுப்பூசி போடுவதற்கு முன்னுரிமை அளிக்கப்படுகின்றது.
இந்நிலையில் கோவிட்-19 தேசிய தடுப்பூசித் திட்டத்தின் 4ஆவது பிரிவின் கீழ் இந்தத் தடுப்பூசி வழங்கப்படும் மாநிலங்களைத் தேர்வு செய்யும் திட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இம்மாதம் இன்னும் அதிகமான இவ்வகை தடுப்பூசிகளை அரசாங்கம் பெறும். எனவே இதன் அடிப்படையில் இதர மாநிலங்களைக் குறிப்பாக சிவப்பு மண்டலங்களில் தன்னார்வ முறையில் இத்தடுப்பூசிகளைப் போடும் மையங்களைத் திறக்க நான் ஆலோசனை வழங்கியுள்ளேன் எனவும் இந்தத் திட்டத்தின் ஒருங்கிணைப்பு அமைச்சருமான கைரி ஜமாலுடின் கூறினார்.