கோலாலம்பூர் (ஜூன் 21) : சமைக்காததற்காக காதலியை அச்சுறுத்தியது, அறைந்தது, கழுத்தை நெரித்தது போன்ற குற்றங்களுக்காக ஒரு கடை உதவியாளருக்கு செலாயாங் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று மூன்று மாத சிறைத்தண்டனை விதித்தது.
கடந்த ஜூன் 15 அன்று , ஜாலான் புக்கிட் ரவாங் புத்ரா, ரவாங் எனும் இடத்திலுள்ள வீட்டில் இரவு 8.30 க்கு வி.ஷாம்னி ( 21) என்ற பாதிக்கப்பட்ட பெண்ணைக் கத்தியைக் காட்டி மிரட்டியதும் ,பாதிக்கப்பட்டவருக்கு காயம் ஏற்படுத்தியதுமான இரண்டு குற்றச்சாட்டுகளையும் தான் செய்ததாக கூறி தன்னை குற்றவாளி என்று குற்றத்தை ஒப்புக் கொண்டதையடுத்து, 26 வயதான ஏ.ஹென்ட்ரி கேசவனுக்கு நீதிபதி நிக் ஃபட்லி நிக் அஸ்லான் சிறைத்தண்டனை வழங்கினார்.
ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் நீதிமன்றம் அவருக்கு மூன்று மாத சிறைத்தண்டனை விதித்தது, மேலும் ஜூன் 16 அன்று குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்ட நாளிலிருந்து ஒரே நேரத்தில் தண்டனைகளை வழங்க உத்தரவிட்டது.
தண்டனைச் சட்டத்தின் பிரிவு 506 இன் கீழ் பயத்தைத் தூண்டும் நோக்கத்துடன், பாதிக்கப்பட்டவருக்கு 24 அங்குல கத்தியைக் காட்டி, அந்த நபர் ஷாம்னியை அச்சுறுத்தியதாகக் கூறப்படுகிறது, இது அதிக பட்சத் தண்டனையாக இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டையும் விதிக்க வகைசெய்கிறது.
தண்டனைச் சட்டத்தின் பிரிவு 323 ன் கீழ் வேண்டுமென்றே பெண்ணுக்கு காயம் ஏற்படுத்தியதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது, இது அதிக பட்சத் தண்டனையாக ஒரு வருடம் சிறைத்தண்டனை அல்லது RM2,000 வரை அபராதம் அல்லது இரண்டையும் விதிக்கிறது.
வழக்கின் உண்மைகளின்படி, தனது காதலி சமைக்காததால் அதிருப்தி அடைந்த குற்றம் சாட்டப்பட்டவர், அந்தப் பெண்ணை வாயில் அறைந்தும் சம்மந்தப்பட்ட பெண்ணின் கழுத்தை நெரித்துக் கொலை செய்ய முயற்சி செய்தார் என்றும் கத்தியைக் காட்டி மிரட்டினார், சித்ரவதை செய்தார் என்றும் பாதிக்கப்பட்ட பெண் போலீசில் புகார் செய்ததன் அடிப்படையிலேயே ,குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டார் என்றும் அறியமுடிகின்றது.
மேலும், துணை அரசு வக்கீல் கைருன்னிசாக் ஹஸ்னி, இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் கடந்த 2018 ஆம் ஆண்டு கடுமையான உடற் தீங்கினை விளைவித்தார் என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருந்தமையால் , அதிக பட்சத் தண்டனை வழங்க வேண்டும் என்று விண்ணப்பித்திருந்தார்.
இருப்பினும், குற்றம் சாட்டப்பட்டவர்களை பிரதிநிதித்துவப்படுத்திய தேசிய சட்ட உதவி அறக்கட்டளையின் (YBGK) வழக்கறிஞர் எம்.மரியப்பன், தவறான புரிதலால் / புரிந்துணர்வின்மையால் இச் சண்டை நடந்தது என்ற அடிப்படையில், சிறைத் தண்டனையை குறைக்குமாறு வாதிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
– எஃப்.எம்.டி