7 பேருக்கு கொரோனா தொற்று
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து கட்டுக்குள் வருகிறது. இந்தநிலையில் நேற்று 80 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதன்மூலம் மாவட்டத்தில் இதுவரை 87 ஆயிரத்து 570 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. நேற்று 148 பேர் ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டனர். அவர்களுடன் சேர்த்து இதுவரை கொரோனா தொற்றில் இருந்து மீண்டு 85 ஆயிரத்து 563 பேர் வீடு திரும்பியுள்ளனர்.
தற்போதைய நிலவரப்படி திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 1,189 பேர் அரசு, தனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சையில் உள்ளனர். நேற்று ஒருவர் தொற்றுக்குப் பலியானார். இதன்மூலம் மொத்த பலி எண்ணிக்கை 818 ஆக உயர்ந்துள்ளது.
இதனிடையே திருப்பூரை அடுத்த கணக்கம்பாளையம் ஊராட்சி வாஷிங்டன் நகரில் ஒரே வீட்டைச் சேர்ந்த 3 பேர், மற்றொரு வீட்டைச் சேர்ந்த 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
இதையடுத்து பெருமாநல்லூர் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் வாஷிங்டன் நகரில் பொதுமருத்துவ முகாம் நடந்தது. சுகாதாரத்துறையினர் வீடு, வீடாகச் சென்று பொதுமக்களுக்கு காய்ச்சல், சளி, இருமல் உள்ளதா? என ஆய்வு மேற்கொண்டனர். 100பேருக்கு தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
7 பேர் பாதிக்கப்பட்டதன் காரணமாக அங்கு 2 வீதிகள் அடைக்கப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. ஊராட்சியில் நடைபெறும் வாரச் சந்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக ஊராட்சி மன்றம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.