ஈப்போ: இதுவரை கோவிட் -19 தடுப்பூசி பெறாத 18 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய பேராக் குடியிருப்பாளர்கள், தங்கள் தடுப்பூசிகளை முன்பதிவு இன்றி, மாநிலத்தில் உள்ள 22 தடுப்பூசி மையங்களில் (PPV) செலுத்திக்கொள்ள முடியும் என்று டத்தோ சரணி முகமட் தெரிவித்தார் .
ஒவ்வொரு மாவட்டத்திலும் முன்பதிவு இன்றிய தடுப்பூசி மையங்கள் சேவையில் உள்ளன என்று பேராக் மந்திரி பெசாருமான டத்தோ சரணி முகமட் கூறினார்.
“மக்களிடம் இருந்து அவர்களின் கருத்துக்களை கேட்டறிந்தோம், அவர்களில் பலர் தங்களின் MySejahtera செயலியில் இதுவரை எந்த நியமனமும் பெறவில்லை.
“அவர்கள் முன்பதிவு இன்றிய தடுப்பூசி மையங்கள் சேவையில் உள்ளது பற்றி அறிந்திருக்க மாட்டார்கள் என்று நினைக்கின்றேன் . இதனால் MySejahtera செயலியில் இதுவரை எந்த நியமனமும் பெறாதவர்கள் உடனடியாக அத்தகைய மையங்களுக்குச் செல்லுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.
மாநில தலைமைச் செயலகத்தில் இன்று (செப்.22) நடைபெற்ற மாநிலச் செயற்குழுக் கூட்டத்திற்குப் பிறகு, செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறுகையில், “முன்பதிவு இன்றிய தடுப்பூசி மையங்கள் அக்டோபர் 31 வரை மட்டுமே சேவையில் இருக்கும் என்றும் . இங்கு வசிக்கும் வெளிநாட்டவர்கள், மற்றும் சட்டவிரோத குடியேறியவர்களுக்கும் திறந்திருக்கும் என்றார்.
கடந்த திங்கள்கிழமை (செப்.20) நிலவரப்படி, 1.55 மில்லியன் மக்கள், அல்லது மாநிலத்தின் 18 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையோரில் 83.57 விழுக்காட்டினர் கோவிட் -19 தடுப்பூசியின் முதல் டோஸைப் பெற்றுள்ளனர் என்று சரணி கூறினார்.
இரண்டாவது டோஸைப் பொறுத்தவரை, 1.15 மில்லியன் மக்கள், அல்லது 18 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையோரில் 61.9 விழுக்காட்டினருக்கு முழுமையாக தடுப்பூசி போடப்பட்டதாக அவர் கூறினார்.










