‘தவறு செய்தால் கை வெட்டப்படும்’.. தாலிபான்களின் கொடூர தண்டனைகள் விரைவில் அமல்!

ஷரியா சட்டப்படி, திருமணமானவர்கள் பிறருடன் உடலுறவில் ஈடுபட்டால் அவர்கள் கல்லால் எரிந்து கொல்லப்படுவார்கள் என தாலிபான்கள் கூறியுள்ளனர்.ஆப்கானிஸ்தானில் தவறு செய்யும் பொதுமக்களின் கை, கால்கள் வெட்டப்படுவது, அடித்துக் கொலை செய்வது போன்ற தண்டனைகள் மீண்டும் அமலுக்கு வரும் என தாலிபான்கள் அறிவித்துள்ளனர்.

தாலிபான்களின் முக்கிய தலைவரும், ஆப்கானிஸ்தானின் சிறைத்துறை தலைவருமான முல்லா நூருதின் துராபி, ஏபி செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள பேட்டியில், தலையை வெட்டுவது, கை, கால்களை வெட்டுவது, போன்ற தண்டனைகள் ஆப்கானிஸ்தான் பாதுகாப்புக்கு மிகவும் தேவை. அவை மீண்டும் அமலுக்கு கொண்டு வரப்படும். ஆனால் முன்பு போல பொதுமக்கள் முன்னிலையில் அந்த தண்டனைகளை நிறைவேற்ற மாட்டோம் என கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

ஆப்கானிஸ்தானில் 1996 முதல் 2001ம் ஆண்டு வரை தாலிபான்கள் ஆட்சியில் இருந்த போது குற்றங்களில் ஈடுபட்டோருக்கு கொடூரமான தண்டனைகள் பொதுமக்கள் முன்னிலையில் நிறைவேற்றப்பட்டு வந்தன. மனிதத் தன்மையின்றி ரத்தத்தை உறையவைக்கும் வகையில் இருந்த அந்த தண்டனைகளுக்கு சர்வதேச அளவில் கண்டனங்கள் எழுந்தன.

இதனிடையே 20 ஆண்டுகளுக்கு பின்னர் ஆப்கனில் மீண்டும் தாலிபான்கள் ஆட்சி அமைத்துள்ள நிலையில், நாங்கள் முன்பு போல கிடையாது, அனைவரையும் உள்ளடக்கிய ஆட்சியை நிறுவுவோம் என்றெல்லாம் கூறினர். ஆனால் தற்போது அங்கு நிலைமை தலைகீழாக உள்ளது, ஏற்கனவே மனித உரிமை மீறல் குற்றங்களை தாலிபான்கள் செய்யத்தொடங்கியுள்ளனர்.

இந்த நிலையில் தான் மீண்டும் கொடூர தண்டனைகளை அமல்படுத்துவோம் என முல்லா நூருதின் துராபி தெரிவித்துள்ளது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

முல்லா நூருதின் கூறுகையில், “ஷரியா சட்டப்படி, திருமணமாகாதவர்கள் செக்ஸ் குற்றங்களில் ஈடுபட்டால், அது ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி அவர்களுக்கான சவுக்கடி தண்டனை பொதுமக்கள் முன்னிலையில் தான், அதே நேரத்தில் திருமணமானவர்கள் செக்ஸ் குற்றத்தில் ஈடுபட்டால் அவர்கள் கல்லால் எரிந்து கொல்லப்படுவார்கள். திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு அது நிரூபிக்கப்பட்டால் அவர்களின் கைகள் வெட்டப்படும்.

ஆப்கன் பாதுகாப்புக்கு கைகள் வெட்டப்படும் தண்டனை மிகவும் அவசியம். இந்த தண்டனைகளுக்கு நிச்சயம் பலன் உண்டு. பொதுமக்கள் முன்னிலையில் இந்த தண்டனைகளை அளிப்பதா வேண்டாமா என அமைச்சரவை ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. விரைவில் இது தொடர்பான கொள்கை முடிவு எடுக்கப்படும்.

ஏற்கனவே கொடூர தண்டனைகளை காபுல் ஸ்டேடியத்திலும், ஈத் கா மசூதி மைதானத்திலும் நிறைவேற்றப்பட்டபோது எங்களை அனைவரும் விமர்சித்தார்கள், ஆனால் பிறர் அளிக்கும் தண்டனையை, சட்டங்களை நாங்கள் விமர்சிப்பதில்லை, நாங்கள் இஸ்லாமை பின்பற்றுவோம், எங்கள் சட்டங்களை குரான் அடிப்படையில் உருவாக்குவோம் என்றார்.

கொடூர தண்டனைகள் மீண்டும் அமல்படுத்தப்படும் என்ற தாலிபான்களின் அறிவிப்பு, ஏற்கனவே அச்சத்தில் இருந்து வரும் ஆப்கானிஸ்தானியர்களை மேலும் திகிலூட்டியிருக்கிறது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here