குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 23 பேர் வீடுகளை இழந்தனர்

கோத்தா கினாபாலு, ஜனவரி 13 :

இங்குள்ள சைபர் சிட்டிக்கு அருகிலுள்ள கேபயானின் கம்போங் சுயோக் பத்து என்ற இடத்தில், இன்று காலை 6.30 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் நான்கு குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 23 பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் வீடுகளை இழந்தனர்.

தீ விபத்தில் 5 வாகனங்களும் எரிந்து நாசமானது.

மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை (JBPM) சபாவின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், காலை 6.37 மணிக்கு அவர்களுக்கு தீப்பரவல் தொடர்பான அழைப்பு வந்தது.

“மொத்தம் 14 உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு உடனே அனுப்பப்பட்டனர். அவர்கள் அந்த இடத்திற்கு வந்தபோது, ​​​​பெரும்பாலான வீடுகள் தீயில் எரிந்திருந்தன.

“இருப்பினும் தீயணைப்பு வீரர்களது வேகமான நடவடிக்கையால் அருகிலிருந்த மற்றைய இரு வீடுகளை காப்பாற்ற முடிந்தது. மேலும் காயங்கள் அல்லது உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை” என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

காலை 7.06 மணியளவில் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகவும், சம்பவத்திற்கான காரணம் மற்றும் இழப்புகளின் அளவு குறித்து இன்னும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

“பாதிக்கப்பட்ட அனைவரும் இப்போது டேவான் கிவாவாங், கேபயானில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்,” என்று அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here