மச்சாங், பிப்ரவரி 5 :
இன்று, இங்குள்ள ஜாலான் கோத்தா பாரு-கோலக் கிராயின் 40 ஆவது கிலோமீட்டரில், அதிக சக்தி வாய்ந்த மோட்டார் சைக்கிள் ஒன்று பல்நோக்கு வாகனத்துடன் மோதிய சம்பவத்தில், மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழந்தார்.
நண்பகல் 1.20 மணியளவில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில், Tiger 900GT Pro மோட்டார் சைக்கிளில் பயணித்த மார்க் பெர்டினாண்ட் ஜோசப் லூர்ட்ஸ் (40) என்பவர், பலத்த காயங்களுடன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மச்சாங் மாவட்ட காவல்துறைத் தலைவர், துணைக் கண்காணிப்பாளர் காந்தி ஜிம்மி கூறுகையில், முதற்கட்ட விசாரணையில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் கோலக் கிராயிலிருந்து கோத்தா பாரு நோக்கிச் சென்றது கண்டறியப்பட்டது.
“சம்பவ இடத்திற்கு வந்ததும், பாதிக்கப்பட்டவர் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் எதிர் பாதையில் நுழைந்து, 26 வயதுடைய நபர் ஓட்டிச் சென்ற Toyota Hilux பல்நோக்கு வாகனம் மீது மோதியதாக நம்பப்படுகிறது.
“இதன் விளைவாக, பாதிக்கப்பட்டவர் இறந்துவிட்டதாக உறுதி செய்யப்பட்டது மற்றும் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக மச்சாங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது, அதே நேரத்தில் பல்நோக்கு வாகன ஓட்டுநர் காயம் எதுவுமின்றி அதிஷ்டவசமாக தப்பினார்” என்று இன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் அவர் கூறினார்.
இந்த வழக்கு சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1987ன் பிரிவு 41 (1)ன்படி கீழ் விசாரிக்கப்படுகிறது என்றார்.