பிரேசிலில் வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 204 ஆக உயர்வு

ரியோ டி ஜெனீரோ, பிப்ரவரி 24:

பிரேசிலின் ரியோ டி ஜெனீரோ மாகாணத்தில் கடந்த வாரம் செவ்வாய் கிழமை இடைவிடாது கனமழை கொட்டித்தீர்த்தது. 30 நாட்கள் பெய்ய வேண்டிய மழை வெறும் 3 மணி நேரத்தில் பெய்ததாக அதிகாரிகள் கூறுகின்றனர். இப்படி ஒரே நாளில் கொட்டித்தீர்த்த கனமழையால் மாகாணத்தில் உள்ள ஆறுகள் உள்ளிட்ட பெரும்பாலான நீர்நிலைகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இந்த வெள்ள நீரானது, ஊருக்குள் புகுந்ததில், மண்சரிவுகள் ஏற்பட்டு பல வீடுகள் மூழ்கி போயின. குறிப்பாக இந்த கனமழையால் அங்குள்ள மலைபிரதேசமான பெட்ரோபோலிஸ் பிராந்தியம் கடுமையான பாதிப்புகளான எதிர்கொண்டுள்ளது. தொடர் கனமழையால் அங்குள்ள பல்வேறு நகரங்களில் வெள்ளம் கரை புரண்டோடுகிறது. இதில் ஆயிரக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின.

சாலைகளில் வெள்ளம் ஆறாக பெருக்கெடுத்து ஓடுவதால் போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது. மேலும் சாலைகளில் நிறுத்தப்பட்டிருந்த ஏராளமான வாகனங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன.

நூற்றுக்கணக்கான கால்நடைகளும் வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்டன. அதே போல் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கின. இதனிடையே கன மழை மற்றும் வெள்ளம் காரணமாக பெட்ரோபோலிஸ் பிராந்தியத்தின் பல இடங்களில் பயங்கரமான நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இதில் ஏராளமான வீடுகள் மண்ணோடு மண்ணாக புதைந்தன.

தொடர்ந்து வெள்ளம், நிலச்சரிவு பாதித்த பகுதிகளில் நூற்றுக்கணக்கான ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டன.

பிரேசிலில் வெள்ளம் மற்றும் மண்சரிவுகளில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 204 ஆக உயர்ந்து உள்ளது. 51 பேரை காணவில்லை. அவர்களை தேடும் பணி தொடர்ந்து வருகிறது. பாதிக்கப்பட்ட பகுதிளில் மீட்பு பணிகள் தொடர்ந்து வரும் நிலையில், பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. மண்சரிவு மற்றும் வெள்ளம் பாதித்த பகுதிகளில் இயந்திரங்களை பயன்படுத்தி மீட்பு பணி மேற்கொள்வதற்கான முயற்சிகள் தாமதமடைந்து உள்ளன.

இதுபற்றி ரியோ டி ஜெனீரோ மாகாணத்தின் தீயணைப்பு துறை செய்தி தொடர்பு அதிகாரி கூறும்போது, நேற்று புயலால் தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன என கூறியுள்ளார். வரலாற்று சுற்றுலா பகுதியான பெட்ரோபோலிஸ் நகரில் பள்ளிகளில் அமைக்கப்பட்ட முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ள 810 பேரை வெளியேற்ற வேண்டிய தேவை ஏற்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here