கோலாலம்பூர், மார்ச் 12 :
வீடு உடைத்து திருடும் கும்பலை சேர்ந்தவர்கள் என நம்பப்படும் மூவரை போலீசார் கைது செய்ததாக, பிரிக்ஃபீல்ட்ஸ் மாவட்ட காவல்துறை தலைமை துணை ஆணையர் அமிஹிசாம் அப்துல் ஷுகோர் தெரிவித்துள்ளார்.
கடந்த மார்ச் 7 அன்று பாதிக்கப்பட்ட ஒருவரிடமிருந்து பெறப்பட்ட புகாரைத் தொடர்ந்து, இந்த குழுவின் செயல்பாடுகள் வெளிவந்தன என்றார்.
அவரது கூற்றுப்படி, பாதிக்கப்பட்டவர் இங்குள்ள ஜாலான் கம்போங் பாசீரில் உள்ள அவரது வீடு உடைக்கப்பட்டதாகவும், அதனால் அவருக்கு சுமார் RM150,000 இழப்பு ஏற்பட்டதாகவும் காவல்துறையில் புகாரளித்திருந்தார்.
“பாதிக்கப்பட்ட 37 வயதான உள்ளூர் பெண்மணியை அவரது கணவர் மாலை 4.50 மணியளவில் தொடர்பு கொண்டு, வீட்டின் இரும்பு கிரில்லில் பொருத்தப்பட்டிருந்த பூட்டைக் காணவில்லை என்றும் கழிவறை ஜன்னல் திறந்து கிடப்பதாகவும் தெரிவித்தார்.
“கழிவறைக்கு அருகில் உள்ள வீட்டின் நடைபாதையிலும் கால்தடங்கள் காணப்பட்டன, மேலும் வீட்டின் அறைகளிலுள்ள பொருட்களும் கூட சிதறிக்கிடந்தன,” என்று அவர் இன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
அவரது கூற்றுப்படி, பாதிக்கப்பட்டவரின் வீட்டிலிருந்து பிராண்டட் கைப்பைகள், பல்வேறு பிராண்டட் கைக்கடிகாரங்கள், RM10,000 ரொக்கம், மின்னணு உபகரணங்கள், மடிக்கணினிகள் மற்றும் நகைகள் போன்ற மதிப்புமிக்க பொருட்களை இழந்ததாகக் கூறினார்.
புகாரைத் தொடர்ந்து, கோலாலம்பூர் கன்டிஜென்ட் தலைமையகத்தின் தடயவியல் பிரிவு சம்பவ இடத்திற்குச் சென்று, ஐந்து கைரேகைகள் மற்றும் ஒரு கால் தடம் ஆகியவற்றைக் கண்டறிந்தது.
“இன்று அதிகாலை 3.15 மணியளவில், பிரிக்ஃபீல்ட்ஸ் மாவட்ட காவல்துறை தலைமையகத்தின் அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்கள் குழு, 30 மற்றும் 41 வயதுடைய இரண்டு உள்ளூர் ஆண்களையும் 35 வயதான உள்ளூர் பெண்ணையும் கைது செய்ய முடிந்தது.
“சந்தேக நபர்களில் ஒருவருக்கு பல்வேறு குற்றவியல் மற்றும் போதைப்பொருள் குற்றங்களுக்காக 23 குற்றப் பதிவுகள் இருப்பது கண்டறியப்பட்டது,” என்று அவர் கூறினார்.
“இந்த வழக்கு குற்றவியல் சட்டத்தின் 457 வது பிரிவின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது, மேலும் நாட்டில் எந்தவொரு விதிகள் அல்லது சட்ட மீறல்களிலும் ஈடுபட வேண்டாம் என்று பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்,” என்று அவர் கூறினார்.








