கிள்ளான், ஜூன் 24 :
இன்று அதிகாலை முதல் பெய்து வரும் கனமழையால் கிள்ளான் மற்றும் கோலா லங்காட்டில் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் துணை இயக்குநரான ஹபிஷாம் முகமட் நூர் கூறுகையில், இங்குள்ள ஜாலான் பெங்கலான் கம்போங் நெலயானில் காலை 6.12 மணியளவில் வெள்ளம் ஏற்பட்டதாகத் தனது துறைக்கு அழைப்பு வந்தது என்றும் இதனால் ஒரு வீடு பாதிக்கப்பட்டது என்றும் கூறினார்.
அந்த வீட்டில் மூத்த குடிமக்கள், பெரியவர்கள் மற்றும் மூன்று குழந்தைகள் வசிப்பதாகவும், தமது உறுப்பினர்கள் அங்கு வந்தவுடன் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள அவர்கள் வெளியே வந்ததாகவும் அவர் கூறினார்.
“காலை 7.19 மணிக்கு, கோலா லங்காட்டில் உள்ள ஜாலான் பெரேபாட் தேலோக் பங்லிமா காராங்கில் ஐந்து வீடுகளை பாதித்த இதேபோன்ற சம்பவம் குறித்து எங்களுக்கு ஒரு அழைப்பு வந்தது.
அங்கு “இரண்டு மூத்த குடிமக்கள், இரண்டு பெரியவர்கள் மற்றும் ஆறு மாத குழந்தை அடங்கிய ஒரு குடும்பத்தை அருகில் உள்ள பாதிக்கப்பட்டவரின் குடும்ப வீட்டிற்கு வெளியேற்ற தீயணைப்பு படை உதவியது,” என்று அவர் கூறினார்.
இதற்கிடையில், காலை 5.24 மணியளவில் பூலாவ் இந்தா, லகுனா பார்க், ஜாலான் சமுதேரா என்ற இடத்தில் மரம் ஒன்று விழுந்துள்ளதுடன் நான்கு வாகனங்கள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
“இந்த சம்பவங்களிலும் எந்த உயிர் சேதம் ஏற்படவில்லை,” என்று அவர் மேலும் கூறினார்.