அலோர் ஸ்டார், ஜூலை 23 :
வளர்ப்புத் தாயால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் நான்கு வயது குழந்தை, மருத்துவமனையில் சிகிச்சை முடிந்ததும், வழக்கின் விசாரணை முடியும் வரை சமூக நலத் துறையின் (JKM) பராமரிப்பு மையத்தில் தங்க வைக்கப்படுவார் என்று பெண்கள், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சர் டத்தோஸ்ரீ ரினா முகமட் ஹருன் தெரிவித்துள்ளார்.
“இதில் முக்கியமானது என்னவென்றால், குழந்தை மருத்துவமனையை விட்டு வெளியேற அனுமதிக்கப்படும்போது, அது தொடர்ந்து ஆரோக்கியமான நிலையில் இருப்பதை நாங்கள் உறுதி செய்ய விரும்புகிறோம்,” என்று குழந்தை சம்பந்தப்பட்ட துஷ்பிரயோக வழக்கு குறித்து கருத்து கேட்கப்பட்டபோது, அவர் கூறினார். .
சமீபத்தில், 27 வினாடிகள் கொண்ட வைரலான வீடியவில், குழந்தையின் வளர்ப்புத் தாய் என்று நம்பப்படும் ஒரு பெண், பாதிக்கப்பட்டவர் உணவு சாப்பிட மறுத்ததால் அக்குழந்தையை விளக்குமாறு குச்சியால் அடித்ததை காட்டியது.
இந்தசம்பவம் தொடர்பில் தற்போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டு, போலீஸ் விசாரணையிலுள்ளார் அத்தோடு பாதிக்கப்பட்ட குழந்தை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறது.