கோலாலம்பூர், ஆகஸ்ட் 9 :
ஜாலான் சுல்தான் இஸ்மாயிலில் உள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தில், நேற்று (ஆகஸ்ட் 8) நடத்தப்பட்ட சோதனையில், போதைப்பொருள் விற்பனையாளர்கள் என்று சந்தேகிக்கப்படும் மூன்று ஆண்கள் மற்றும் இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்களிடமிருந்து RM1.38 மில்லியன் மதிப்புள்ள 38.16 கிலோகிராம் சியாபு போதைப்பொருட்களும் கைப்பற்றப்பட்டன.
முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில், கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள், கோலாலம்பூரில் உள்ள ஒரு பெறுநரிடம் ஒப்படைக்க, கிள்ளான் பள்ளத்தாக்கிற்கு வெளியில் இருந்து கொண்டு வரப்பட்டதாகக் கருதப்படும் ஹோண்டா சிட்டி வகை காரில், சம்பந்தப்பட்ட அனைத்து போதைப் பொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டதாக டாங் வாங்கி மாவட்ட காவல்துறைத் தலைவர், துணை ஆணையர் நூர் டெல்ஹான் யஹாயா தெரிவித்தார்.
தமது துறைக்கு கிடைத்த தகவலின்படி, கோலாலம்பூரில் உள்ள ஜாலான் சேந்தானாவில் நேற்று மாலை 6.15 மணியளவில் ஒரு நபரை போலீசார் கைது செய்தனர், சம்பந்தப்பட்ட சந்தேக நபர்களில் ஒருவரிடமிருந்து 1.7 கிராம் சியாபு வகை போதைப்பொருளையும் அவரது தரப்பு கைப்பற்றியதாக நூர் டெல்ஹான் கூறினார்.
“இந்தச் சோதனையை தொடர்ந்து, இரண்டு ஆண்களும் இரண்டு பெண்களும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து இரு ஹோண்டா சிட்டி வாகனங்கள், தோயோத்தா வெல்பயர் கார் மற்றும் RM1,200 ரொக்கம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்,” என்று அவர் கூறினார்.
20 முதல் 49 வயதுக்குட்பட்ட அனைத்து சந்தேக நபர்களிடமும் மேற்கொள்ளப்பட்ட சிறுநீர் பரிசோதனையின் முடிவுகளில், அவர்களில் இருவர் போதைப்பொருள் பாவனை மற்றும் கிரிமினல் குற்றங்கள் தொடர்பான கடந்தகால பதிவுகளைக் கொண்டுள்ளனர் என்று அவர் கூறினார்.
சந்தேக நபர்களில் மூன்று பேர் சியாபு போதைப்பொருளுக்கு சாதகமாக இருப்பது கண்டறியப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.
“சந்தேக நபர்கள் அனைவரும் செவ்வாய் முதல் ஆகஸ்ட் 15 வரை ஏழு நாட்கள் காவலில் வைக்கப்பட்டனர் என்றும் ஆபத்தான மருந்துகள் சட்டம் (ADB) 1952 இன் பிரிவு 39B இன் கீழ் வழக்கு விசாரிக்கப்பட்டது,” என்று அவர் கூறினார்.