அம்பாங், செப். 28 :
நேற்று இங்குள்ள பண்டார் பாரு அம்பாங்கில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் ஆறாவது மாடியில் இருந்து, குதித்து கல்லூரி மாணவி ஒருவர் உயிரிழந்தார்.
தலையில் பலத்த காயங்கள் மற்றும் கை, கால்கள் உடைந்ததால் 20 வயதுடைய பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என அம்பாங் ஜெயா மாவட்ட காவல்துறை தலைவர், துணை ஆணையர் முகமட் ஃபாரூக் எஷாக் தெரிவித்தார்.
இந்த சம்பவம் குறித்து காவல்துறைக்கு நேற்று பிற்பகல் 3.26 மணிக்கு தகவல் கிடைத்தது.
“விசாரணையின் அடிப்படையில், அந்தப் பெண் தனது தாய் மற்றும் மூன்று உடன்பிறப்புகளுடன் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கிறார்.
“சம்பவத்தன்று, அடுக்குமாடி குடியிருப்பின் ஆறாவது மாடிக்கு சென்று, அங்கிருந்து அவர் பால்கனி வழியாக குதித்துள்ளார் என சந்தேகிக்கப்படுகிறது. அவரது உடல் கட்டடத்தின் கீழ் பகுதியில் கிடக்க காணப்பட்டது” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
காவல்துறையின் முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில், இந்தச் சம்பவத்திற்கான காரணம் காதல் தோல்வியாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
பாதிக்கப்பட்டவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக இங்குள்ள அம்பாங் மருத்துவமனை தடயவியல் பிரிவுக்கு அனுப்பப்பட்டது, மேலும் இவ்வழக்கு திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.