கோலாலம்பூர், நவம்பர் 3 :
வடகிழக்கு பருவமழை (MTL) எதிர்பார்த்ததை விட முன்னதாகவே நாடு எதிர்கொள்ளும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்த்துள்ளது.
இது எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மார்ச் 2023 வரை தொடரும் என்றும், எதிர்வரும் மூன்று மாதங்களில் மலேசியா ஆறு உயர் அலை எழுச்ச்சி நிகழ்வுகளை சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று, வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் ஜெனரல் முஹமட் ஹெல்மி அப்துல்லா தெரிவித்துள்ளார்.
“கடந்த காலங்களைப் போலவே, பல நாட்களுக்கு தொடர்ந்து கனமழை பெய்தால், தாழ்வான பகுதிகள் மற்றும் ஆறுகளுக்கு அருகிலுள்ள பகுதிகளில் வெள்ளம் ஏற்படலாம். இவ்வேளையில் அதிக அலை எழுச்சியும் தொடர் கனமழையும் ஒரே நேரத்தில் பெய்தால் வெள்ள அபாயம் அதிகரிக்கும் என்று அவர் மேலும் கூறினார்.
“உயர் அலை எழுச்சி நிகழ்வு நவம்பர் 6 முதல் 11 மற்றும் 22 முதல் 27 வரை, அதைத் தொடர்ந்து டிசம்பர் 7 முதல் 12 மற்றும் 22 முதல் 26 டிசம்பர் மற்றும் அடுத்த ஆண்டு ஜனவரி 6 முதல் 10 மற்றும் 21 முதல் 25 வரையான காலப்பகுதியில் நிகழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்று அவர் இன்று வெளியிட்ட ஒரு ஊடக அறிக்கையில் தெரிவித்தார்.