புக்கிட் மெர்தாஜாம், நவம்பர் 7 :
செபெராங் பிறை தெங்கா மாவட்ட சுகாதார அலுவலகத்தின் (PKDSPT) உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயப் பிரிவு, நேற்று நடத்திய சோதனையில், உணவு சுகாதார விதிகள் 2009ன் கீழ் பல்வேறு குற்றங்களுக்காக மொத்தம் 21 அபராதங்களை விதித்தது.
விதிக்கப்பட்ட அபராதத்தின் மொத்தத் தொகை RM8,950 ஐ எட்டியுள்ளது என்று மாநில சுகாதாரத் துறையின் உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப் பிரிவு வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, செபெராங் பிறை தெங்கா மாவட்ட சுகாதார அலுவலகத்தின் துணை சுற்றுச்சூழல் சுகாதார அதிகாரி உட்பட மொத்தம் 10 உறுப்பினர்களை உள்ளடக்கிய குழுவினால், குறித்த அமலாக்க நடவடிக்கை புக்கிட் மெர்தாஜாமைச் சுற்றி மேற்கொள்ளப்பட்டது.
இதில் மொத்தம் 18 உணவு வளாகங்கள் ஆய்வு செய்யப்பட்டதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உணவு வளாகத்தின் உரிமையாளர்கள் மற்றும் நடத்துநர்கள் தங்கள் உணவு வளாகங்கள் எல்லா நேரங்களிலும் தூய்மையான நிலையில் இருப்பது உட்பட அனைத்து விதிமுறைகளுக்கும் அவை இணங்குவதை உறுதி செய்வதும் அவர்களின் பொறுப்பாகும் என்பது குறிப்பிடத்தக்கது.