லங்காவி, நவம்பர் 20:
இங்குள்ள தஞ்சோங் ராமி, பூலாவ் துபா அருகே உள்ள பாறைப் பகுதியில், அழுகிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் நேற்று கண்டெடுக்கப்பட்டதாக லங்காவி மாவட்ட காவல்துறைத் தலைவர், துணை ஆணையர் ஷரிமான் ஆஷாரி தெரிவித்தார்.
அடையாளம் தெரியாத சடலம் தொடர்பில், பொதுமக்களிடமிருந்து நேற்றுக் காலை 11 மணியளவில் தகவல் கிடைத்ததது. உடனே பூலாவ் துபாவில் 15வது பொதுத் தேர்தல் (GE15) செயல்முறையை கண்காணிக்கும் பொறுப்பில் இருந்த போலீஸ்காரர்கள் அவ்விடத்திற்கு அனுப்பப்பட்டனர்.
மேலும் சடலம் அழுகியுள்ளதால் இதுவரை அது அடையாளம் காணப்படவில்லை என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
உடல் பிரேத பரிசோதனைக்காக சுல்தானா மலிஹா மருத்துவமனையின் தடயவியல் பிரிவுக்கு அனுப்பப்பட்டதாக ஷரிமான் கூறினார்.
மேலும், இதுவரை இந்த வழக்கு திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டுள்ளதுடன், குடும்ப உறுப்பினர்களை இழந்தவர்கள் விசாரணைக்கு உதவ முன்வருமாறு அவர் கேட்டுக் கொண்டார்.