கோலாலம்பூர், நவம்பர் 24:
நாட்டில் புதிய பிரதமர் நியமனத்துடன் ஒரு ஒற்றுமையான அரசாங்கம் அமைக்கப்படுவதற்கு வழிவிடுவதே சிறந்த நடவடிக்கை என்று, தேசிய முன்னணி தலைவர் டத்தோ ஶ்ரீ அஹ்மட் ஜாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.
மத்திய அரசாங்கம் அமைக்கப்படுவதில் தேசிய முன்னணியின் முடிவு குறித்து ஒரு விமர்சகர் ஒருவர் முகநூலில் எழுப்பிய கேள்விக்கே அவர் இவ்வாறு பதிலளித்தார்.
“நான் கருத்து வேறுபாடுகளைக் கொண்டிருந்தாலும் நாடு என்று வந்துவிட்டால் நாம் என்ன செய்தாலும் முதலில் அதற்குத்தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்” என்று, தமது முகநூலில் அவர் குறிப்பிட்டிருக்கின்றார்.
இதனிடையே, பொயிபி லியூ ஜியா பூய் என்ற மற்றொருவர், அஹ்மட் ஜாஹிட்டுக்கு வாழ்த்துக் கூறியதுடன் நாட்டை முன்னேற்றமடையச் செய்ய அனைத்து இன மக்களும் ஒன்றிணைந்து, ஒத்துழைக்க முடியும் என்று கூறியிருக்கின்றார்.
“இதுதான், தொடக்கத்திலிருந்து இதுவரைக்குமான தேசிய முன்னணியின் போராட்டம் “என்று ஜாஹிட் அவருக்கு பதிலளித்தார்.