பத்தாங்காலியில் ஏற்பட்ட நிலச்சரிவு சோகத்தில் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண் உட்பட நான்கு பேர் செலாயாங் மருத்துவமனையில் ஆரோக்கியமாக இருப்பதாக சுகாதார அமைச்சர் டாக்டர் ஜாலிஹா முஸ்தபா தெரிவித்தார். இது அவர்களுக்கு சிகிச்சையளித்த நிபுணர்களால் தெரிவிக்கப்பட்டது, நாங்கள் அவர்கள் நான்கு பேரையும் சந்தித்தோம். அவர்கள் அனைவரும் நலமாக உள்ளனர். சிலர் நாளை அல்லது நாளை மறுநாள் இல்லம் திரும்புவார்கள் என்று கூறினார்.
பிரதமர் அன்வார் இப்ராஹிமின் மனைவியும், பண்டார் துன் ரசாக் நாடாளுமன்ற உறுப்பினருமான டாக்டர் வான் அஸிசா வான் இஸ்மாயிலுடன் நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனையில் அமைச்சர் பார்வையிட்டார்.
பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் அவர்களின் மன மற்றும் உணர்ச்சி ஆரோக்கியம் நல்ல நிலையில் இருப்பதை உறுதி செய்வதற்காக சுகாதார அமைச்சகம் உளவியல் ஆதரவு சிகிச்சையை வழங்கும் என்று ஜாலிஹா கூறினார்.
வெள்ளிக்கிழமை அதிகாலை 2.42 மணியளவில் இடம்பெற்ற இந்த நிலச்சரிவில் இதுவரை பல குழந்தைகள் உட்பட 24 பேர் உயிரிழந்துள்ளதாக அறியப்படுகிறது. 300மீ நீளமும் 70மீ உயரமும் கொண்ட மலைச்சரிவின் ஒரு பகுதி, கெந்திங் ஹைலேண்ட்ஸுக்கு பத்தாங்காலி சாலைக்கு அருகில் உள்ள ஃபாதர்ஸ் ஆர்கானிக் ஃபார்மில் உள்ள மூன்று முகாம்களில் விழுந்து நொறுங்கியது. பாதிக்கப்பட்ட மேலும் ஒன்பது பேரை இன்னும் காணவில்லை.