ஜோகூரின் கோத்தா திங்கியில் உள்ள புக்கிட் பெசார், ஃபெல்டா சுங்கை சயோங்கில், நேற்று (மார்ச் 1) காலை ஏற்பட்ட நிலச்சரிவில் யாரும் பாதிக்கப்படவில்லை என்று கோத்தா திங்கி மாவட்ட காவல்துறை தலைவர், ஹூசின் சமோரா கூறினார்.
காலை 8.30 மணியளவில் நடந்த இந்த சம்பவத்தில், நான்கு கடைகளைக் கொண்ட வளாகத்திற்குப் பின்னால் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் நிலத்தின் கட்டமைப்புகள் பாதிக்கப்பட்டன என்றும், நிலச்சரிவு ஏற்பட்ட பகுதி குறித்த கடை வளாகத்திலிருந்து 5 மீ தொலைவில் அமைந்துள்ளது,” என்றும் அவர் நேற்றிரவு வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
இதுவரை, கோத்தா திங்கி மாவட்டத்தில் நான்கு சாலைகள் அனைத்து வாகனங்களுக்கும் மூடப்பட்டுள்ளன, அதாவது ஜாலான் கோத்தா திங்கி-குளுவாங் (Arked Mara)), ஜாலான் துன் ஸ்ரீ லானாங் (பண்டார் கோத்தா திங்கி), ஜாலான் கம்போங் கிளாந்தான் /கம்போங் பாண்டி மற்றும் ஜாலான் மாவாய் லாமா (Rumah Burung) என்பவையாகும் .
இதற்கிடையில், ஜலான் சுங்கை சயோங் (Loji Sayong) சாலை அனைத்து இலகுரக வாகனங்களுக்கும் மூடப்பட்டுள்ளது என்று அவர் மேலும் கூறினார்.