சண்டாக்கானின் நீர்ச் சேரி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 90க்கும் மேற்பட்ட வீடுகள் நாசம்

இன்று அதிகாலை 3 மணியளவில், சண்டாக்கானின் கம்போங் செண்டாரமாடா பத்து சாபியில் நீருக்கு மேல் அமைக்கப்பட்ட ஒரு சேரிக் குடியிருப்பில் ஏற்பட்ட தீப்பரவலில், 90க்கும் மேற்பட்ட வீடுகள் தீப்பிடித்து எரிந்ததில் 450க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் வீடுகளை இழந்தனர்.

சம்பவம் தொடர்பில் தீயணைப்பு மற்றும் மீப்பு துறைக்கு தகவல் கிடைத்ததும், சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் வேகமாக செயற்பட்டு, காலை 7.48 மணியளவில் தீ கட்டுக்குள் கொண்டுவந்ததாக சண்டாக்கான் மாவட்ட காவல்துறைத் தலைவர், துணை ஆணையர் அப்துல் ஃபுவாட் அப்துல் மாலேக் தெரிவித்தார்.

இந்த சம்பவத்தில் யாருக்கும் காயங்கள் அல்லது உயிரிழப்புகள் ஏற்படவில்லை. மேலும் வீடுகளை இழந்தவர்கள் தங்குவதற்கு அங்கு தற்காலிக நிவாரண மையம் திறக்கப்பட்டது என்று, பத்து சாபி, சண்டாக்கானில் உள்ள கம்போங் செண்டாரமாடா குடியிருப்பை ஆய்வு செய்த பின்னர், செய்தியாளர் கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்தார்.

சம்பவத்திற்கான காரணம் இன்னும் விசாரணையில் உள்ளது என்று அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here