உலகளவில் நம்மவர்கள் வர்த்தகத்தை மேற்கொள்ள வேண்டும் என்ற நோக்கில் KLSICCI பல நாடுகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் கென்யாவின் புகழ்பெற்ற கென்யா தேசிய வர்த்தக மற்றும் தொழில்துறை சம்மேளத்துடன் (KNCCI -Est.1965) கோலாலம்பூர்- சிலாங்கூர் இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை சம்மேளம் (KLSICCI-Est.1928) புரிந்துணர்வு ஒப்பந்ததில் கையெழுத்திட்டது.
புரிந்துணர்வு ஒப்பந்ததின் போது கென்யாவிற்கான மலேசிய தூதர் Ruzaimi Mohamad, கென்யா தூதர் Francis Muhoro ஆகியோருடன் முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டனர். KNCCI தலைவர் ரிச்சர்ட் ங்காடியா & KLSICCI தலைவர் நிவாஸ் ராகவன் இருவரும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இரு நாடுகளுக்கிடையிலான ஒப்பந்தம் முதலீடு, வர்த்தகம், தொழில் துறை சார்ந்த வாய்ப்புகளை இது உள்ளடக்கியதாகும். இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம், கென்யாவிற்கும் மலேசியாவிற்கும் இடையிலான வர்த்தக மற்றும் முதலீட்டு உறவுகளை ஒரு கூட்டு வணிக கவுன்சில் (மலேசியா – கென்யா வர்த்தக மன்றம்) மூலம் எளிதாக்கும் செயலில் ஈடுபட வேண்டும் என்று அவர்கள் ஒப்புக்கொண்டனர்.
ஆப்பிரிக்காவில் வேகமாக வளரும் 5 பொருளாதார நகரில் கென்யாவும் ஒன்று. உலக வங்கியின் உத்தியோகபூர்வ தரவுகளின்படி, கென்யாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 2021 இல் USD110.35 பில்லியனாக இருந்தது. கென்யா சமீபத்தில் குறைந்த-நடுத்தர வருமான நிலையை அடைந்தது. மேலும் பல்வேறு மற்றும் ஆற்றல்மிக்க பொருளாதாரத்தை வெற்றிகரமாக நிறுவியுள்ளது. இது பெரிய கிழக்கு ஆபிரிக்க சந்தைக்கான நுழைவுப் புள்ளியாகவும் செயல்படுகிறது.
மலேசியாவில் இருந்து கென்யாவிற்கு 2022ஆம் ஆண்டில் செம்பனை எண்ணெய், கெமிக்கல், ரப்பர் பொருட்கள் உள்ளிட்ட 1.2 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான பொருட்களை ஏற்றுமதி செய்துள்ளது. தற்பொழுது இரு நாடுகளும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்ததின் வழி வர்த்தகம் மேலும் வலுபெறும் என நம்பப்படுகிறது. இது ஒப்பந்ததின் வழி 5 மில்லியன் அமெரிக்க டாலருக்கும் குறையாத வர்த்தக ஒப்பந்தங்கள் நடைபெறும் என நம்பப்படுகிறது.