பேராக் சுல்தானுக்கு எதிராக அவதூறு தெரிவிக்கும் ஒரு வீடியோவை @ijaheartfarizahwhitenew என்ற டிக்டாக் கணக்கில் பதிவேற்றிய குற்றச்சாட்டில் 34 வயதான பெண் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சிலாங்கூர், கிள்ளானில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் அந்தப் பெண் நேற்று கைது செய்யப்பட்டதாக தேசிய காவல்துறை செயலாளர் டத்தோ நூர்சியா முகமட் சாதுதீன் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.
அவரிடமிருந்து Vivo Y15A தொலைபேசி மற்றும் இரண்டு சிம் கார்டுகளையும் போலீசார் கைப்பற்றினர்.
மேலும் சந்தேக நபருக்கான தடுப்புக் காவல் உத்தரவு இன்று நடைமுறைப்படுத்தப்படும் என்றும் கூறினார்.
பொது ஒழுங்கு மற்றும் பாதுகாப்பை சீர்குலைக்கும் அறிக்கைகளை வெளியிடுவதன் மூலம் சமூக ஊடகங்கள் அல்லது எந்தவொரு தகவல் தொடர்பு வலையமைப்பையும் தவறாக பயன்படுத்த வேண்டாம் என்றும் அவர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார்.