நியூசிலாந்தின் டெகாபோ அருகே நடந்த சாலை விபத்தில் உயிரிழந்த இரண்டு மலேசிய மாணவர்களின் உடலை மலேசியாவிற்கு கொண்டு வர உயர்கல்வி அமைச்சகம் உதவிகளை வழங்கும். அதன் அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜம்ரி அப்துல் காதிர் கூறுகையில், வெளியுறவு அமைச்சகத்திடம் (விஸ்மா புத்ரா) மாணவர்கள் பற்றிய கருத்துகளையும் முழுமையான தகவல்களையும் அமைச்சகம் பெற்று வருகிறது.
இதுவரை, இந்த விவகாரம் தொடர்பான முழுமையான தகவல்கள் எங்களிடம் இல்லை. உடல்களை கொண்டு வருவது உட்பட செயல்முறைகள் சீராக இயங்குவதை உறுதி செய்வதற்கான தேவைகள் தொடர்பான விஷயங்களில் அமைச்சகம் உதவும்.
இருப்பினும், இறுதிச் சடங்குகள் தொடர்பாக சம்பந்தப்பட்ட குடும்பத்தினருடன் கலந்துரையாடல்களை நடத்த வேண்டியிருப்பதால், அதை முதலில் குடும்பத்தினரிடம் விட்டுவிடுவோம் என்று அவர் அம்னோவுடனான மஞ்சோங் மாவட்டத்தில் நோன்பு துறப்பு நிகழ்வோடு 70 மாணவர்கள், மசூதிகள் மற்றும் சுராவுக்கு நன்கொடைகளை வழங்கிய பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார். சம்பந்தப்பட்ட குடும்பங்களுக்கு தனது இரங்கலைத் தெரிவித்த ஜம்ரி, சம்பவத்தில் காயமடைந்த மேலும் மூன்று மலேசிய மாணவர்கள் பற்றிய கூடுதல் தகவல்களை அமைச்சகம் பெற்று வருவதாகக் கூறினார்.
முன்னதாக, நியூசிலாந்தின் வெலிங்டனில் உள்ள மலேசிய தூதரகத்தின் மூலம் வெளியுறவு அமைச்சகம் ஒரு அறிக்கையில், உள்ளூர் நேரப்படி சனிக்கிழமை மதியம் 1.45 மணியளவில் டெகாபோவில் நடந்த சாலை விபத்தில் இரண்டு மலேசிய மாணவர்கள் இறந்ததை உறுதிப்படுத்தியது.
இந்த விபத்தில் ஐந்து மலேசிய மாணவர்கள் சிக்கியதாகவும், மீதமுள்ள மூன்று பேர் அவசர மருத்துவ சிகிச்சைக்காக சவுத் தீவில் உள்ள கிறிஸ்ட்சர்ச் மருத்துவமனைக்கு விமானத்தில் கொண்டு செல்லப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெலிங்டனில் உள்ள மலேசிய தூதகரத்தின் செய்தித் தொடர்பாளரை பெர்னாமா தொடர்பு கொண்டபோது, உயிரிழந்தவர்கள் மெகாட் அஷ்மான் அகிஃப் மெகாட் இர்மான் ஜெஃப்னி மற்றும் வான் நூர் அட்லினா அலிசா என உறுதிப்படுத்தினார்.
காயமடைந்த மூன்று மாணவர்களில் இருவரான நூர் ஃபிராஸ் வஃபியா மற்றும் லியா இஸ்ஸபிள் அனாக் வால்டன் ஆகியோர் ஒரே பல்கலைக்கழகத்தில் மாணவர்களாக உள்ளனர். மேலும் வெலிங்டனின் விக்டோரியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த முஹமட் ஃபாரிஸ் முகமது ஃபைருஷாம் காயமடைந்த மாணவர்களில் ஒருவராவார்.









