
மலேசியா – மொரிஷியஸ் இரு நாடுகளிடையிலான வர்த்தகத்தை மேம்படுத்தும் நோக்கில் கே.கே.மார்ட் ஸ்தாபகர் டத்தோஸ்ரீ டாக்டர். கே.கே சாய் தலைமையில் மலேசிய தூதுக்குழு மொரிஷியஸுக்கு சென்றுள்ளனர். கேகே சூப்பர்மார்ட் குழுமத்தின் நிறுவனரும் தலைமை செயல்முறை அதிகாரியுமான டத்தோஸ்ரீ டாக்டர் கேகே சாய், டத்தோ பிரதீப் குமார் தலைமையிலான மலேசியக் குழு, சிங்கப்பூர், தாய்லாந்து, தென்னாப்பிரிக்காவிலிருந்து வணிகப் பிரதிநிதிகளுடன் சமீபத்தில் மொரீஷியஸுக்குச் சென்று சாத்தியமான வணிக வாய்ப்புகளை ஆய்வு செய்ய சென்றிருந்தனர். அந்த தூதுக்குழுவை மொரீஷியஸ் குடியரசுத் தலைவர் பிருத்விராஜ்சிங் ரூபன் ஜி.சி.எஸ்.கே நேரில் வந்து வரவேற்றார்.

மேலும், வர்த்தகம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சர் மேரி கிறிஸ்டின் டோரின் சுகோவ்ரி, மொரீஷியஸின் உயர் ஆணையர், பொருளாதார மேம்பாட்டு வாரியம் (EDB), மொரீஷியஸ் வர்த்தக சபையை சேர்ந்த பல்வேறு தரப்பினரும் குழுவை வரவேற்றனர். டத்தோஸ்ரீ டாக்டர் கே.கே.சாய், மொரிஷியஸ் பிளாண்டர்ஸ் அக்ரிகல்சுரல் பை-ப்ராடக்ட்ஸ் பிராசசிங் கூட்டுறவு சங்கத்துடன் (MPABP கூட்டுறவு சங்கம்) புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.

மலேசியா – மொரிஷியஸ் இடையேயான வர்த்தக உறவு படிப்படியாக வளர்ந்து வருகிறது. சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகம் குறிப்பிடத்தக்க நிலையை எட்டியுள்ளது. இது வலுவான பொருளாதார உறவுகளை பிரதிபலிப்பதோடு 2023 ஆம் ஆண்டில், மலேசியா மற்றும் மொரிஷியஸுக்கு இடையிலான மொத்த வர்த்தகம் ஏறக்குறைய 1.35 பில்லியன் ரிங்கிட் (சுமார் 300 மில்லியன் அமெரிக்க டாலர்கள்) ஆகும்.
இந்த பயணத்தின் போது, மலேசிய தூதுக்குழு மொரிஷியஸ் உயர்மட்ட தலைவர்களுடன் சந்திப்பு நடத்தி சாத்தியமான ஒத்துழைப்பு குறித்து விவாதித்ததோடு பிரதிநிதித்துவ நாடுகளுக்கு இடையே இருதரப்பு வர்த்தகம், முதலீட்டை மேம்படுத்துவது குறித்தும் பேசப்பட்டது. தொடர்ந்து அமைச்சருடனான சந்திப்பில் பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவது, சில்லறை வணிகம், தளவாடங்கள், சுகாதாரம், தகவல் தொழில்நுட்பம், நிதிச் சேவைகள், ரியல் எஸ்டேட், வேளாண் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பரஸ்பர வளர்ச்சிக்கான வழிகளை ஆராய்வது குறித்து மேலும் வலியுறுத்தப்பட்டது.

டத்தோஸ்ரீ டாக்டர். கே.கே சாய், MPABP கூட்டுறவு சங்கம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் பொருளாதார மேம்பாட்டு வாரியத்தில் (EDB) நடந்தது. EDB இன் தலைவர், EDB இன் தலைமை செயல்முறை அதிகாரி, EDB இன் வர்த்தக ஆலோசகர் உள்ளிட்ட பலர் வருகை புரிந்து புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு சாட்சியாகவும் இருந்தனர். இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒத்துழைப்பை வளர்ப்பதற்கும் வணிக நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கும், இரு நாடுகளுக்கும் பயனளிக்கும்.
MPABP கூட்டுறவு சங்கம் மொரீஷியஸின் வெளிப் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. அதன் உறுப்பினர்களின் பொருளாதார நலன்களை ஆதரிக்க, குறிப்பாக சில்லறை வணிகம், விவசாயம் தொடர்புடைய தொழில்களில் ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டில் கவனம் செலுத்தும். மலேசியாவின் அனைத்துலக கூட்டாண்மைகளை வலுப்படுத்துவதில் இந்த விஜயம் ஒரு முக்கியமான மைக்கல்லை குறிக்கிறது என்று டத்தோஸ்ரீ டாக்டர். கே.கே.சாய் குறிப்பிட்டார். சாத்தியமான ஒத்துழைப்புகள் பற்றி அவர் நம்பிக்கை தெரிவித்தார். மேலும் மொரிஷியஸ், மலேசியா ஆகிய இரு நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கும் பங்களிக்கும் என்று கூறினார்.

இந்த அனைத்துலக ஒத்துழைப்பு மலேசியா- மொரிஷியஸின் பொருளாதார வளர்ச்சிக்கு மட்டும் நன்மை பயக்காமல் முழு தென்கிழக்கு ஆசியாவிற்கான பரந்த நன்மைகளை கொண்டு வரும் என்று கருத்து தெரிவித்தார். ஆப்பிரிக்காவிற்கும் ஆசியாவிற்கும் இடையிலான ஒரு முக்கியமான இணைப்பாக மொரிஷியஸின் மூலோபாய நிலையை அவர் உயர்த்திக் காட்டினார். இது மலேசிய வணிகங்கள் புதிய சந்தைகள் மற்றும் வளங்களைத் தட்டியெழுப்ப உதவும். மொரிஷியஸுடனான ஒத்துழைப்பை வலுப்படுத்துவது மலேசியாவின் அனைத்துலக போட்டித்தன்மையை மேம்படுத்துவதோடு தென்கிழக்கு ஆசியாவில் பொருளாதார ஒருங்கிணைப்பை ஊக்குவிக்கும் என்கிறார் டத்தோஶ்ரீ டாக்டர் கே.கே.சாய்.







