முதல்வராகும் தகுதி திருமாவளவனுக்கு உண்டு: சீமான் ஆதரவு

நாமக்கல்:

” விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுக்கு, முதல்வராக அனைத்து தகுதியும் உள்ளது. அவரை நாங்கள் ஆதரிப்போம்,” என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

நாமக்கல்லில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாவது: தமிழகத்தில் திராவிட நாடு எதற்கு வேண்டி இருக்கிறது. அதன் எல்லை எது? திராவிட நாடு இலக்கியத்தில் , வரலாற்றில் எங்கு உள்ளது. தமிழனை வசதியாக ஆள்வதற்கு திராவிட நாடு என சொல்கின்றனர். நான் தமிழன். அதனால் தமிழ்த்தாய் வாழ்த்தை தூக்குவேன் எனக்கூறுகிறேன். தமிழ்த்தாய் வாழ்த்து வேண்டாம் என சொல்லவில்லை. வேறு பாடலை வைப்பேன். திராவிடனுக்கு மொழி எது. தமிழ் என்பது எங்கள் மொழி. தமிழர்கள் என்பது இன அடையாளம்.

தமிழ்த்தாய் வாழ்த்தை தூக்குவேன் என 2016 முதல் கூறி வருகிறேன். வேறு ஒருவரின் பாடலை வைப்பேன். பாரதிதாசன் பாடலை கூட வைப்பேன். பாவேந்தர் பாரதிதாசன் பாடலை வைக்க முடியாதா? தூய தமிழ் பாடலை வைப்பேன். திராவிடம், திராவிடம் எனக்கூறி திட்டமிட்டு அனைவரையும் வீழ்த்துகிறீர்கள். கீழடி நாகரிகத்தை தமிழக நாகரிகம் என சொல்ல மறுக்கிறார்கள்.

யார் திராவிடர் என்பது குறித்து விவாதிக்க அமைச்சர் அன்பில் மகேஷ் தயாரா?விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் முதல்வர் ஆவதை வரவேற்கிறேன். அதற்கு அவருக்கு தகுதி உள்ளது. இதற்காக தமிழனாக, என்னை விட பெருமையும், மகிழ்ச்சியும் அடையும் நபர் வேறு யாரும் இருக்க முடியாது. அவரை எப்படியாவது முதல்வர் ஆக்குவோம். எல்.முருகன் இரண்டு முறை மத்திய அமைச்சர் ஆகும் போது திருமாவளவன் முதல்வர் ஆக முடியாதா ?

திருமாவளவனின் முதல்வராகும் கனவு பலிக்காது என சொல்வதற்கு எல்.முருகன் யார் ? உள் ஒதுக்கீடுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தால் முதல்வராக விட மாட்டீர்களா? இட ஒதுக்கீட்டை ஆதரிக்கிறோம். உள் ஒதுக்கீட்டை எதிர்க்கிறோம். தனித்து நிற்க தி.மு.க.,வுக்கு தைரியமில்லை. என்னை பார்த்து தி.மு.க., பயப்படுகிறது. விஜய் கட்சியை பார்த்தும் பயப்படுகிறது. இவ்வாறு சீமான் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here