தங்களின் சொந்த நாட்டிற்கு திரும்பும் அந்நிய தொழிலாளர்களுக்கான மாற்றுத் தொழிலாளிகளை தருவிக்க அரசாங்கத்துடன் பேச்சு வார்த்தை நடத்துவோம் என்று மலேசிய முஸ்லிம் உணவக உரிமையாளர் சங்கம் (பிரெஸ்மா) தலைவர் டத்தோ ஹாஜி ஜவ்ஹர் அலி தய்யூப்கான் @ டத்தோ அலி மாஜு தெரிவித்தார். பிரெஸ்மாவின் 20ஆம் ஆண்டு பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய டத்தோ அலி மாஜு 1992இல் சங்கம் பதிவு செய்யப்பட்டது. சங்கம் தொடங்கி 32ஆண்டுகள் கடந்து விட்டன. இன்று 13,000க்கும் மேற்பட்ட உணவகங்கள் பிரெஸ்மா கீழ் இயங்கி வருகின்றன. ஆனால் இன்றளவும் நாங்கள் உணவகங்களை நடத்த சிரமப்பட்டு வருகிறோம்.
தற்பொழுது நாங்கள் மாற்றுத் தொழிலாளர்களுக்கான பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகிறோம். மேலும் அதிகமான தொழிலாளர்களை பணி அமர்த்தும் முதலாளிகள் இனி வரும் காலங்களில் அதிக லெவி கட்டணத்தை அதிகமாக செலுத்த வேண்டியிருக்கிறது. மேலும் தற்பொழுது அந்நியத் தொழிலாளர்களுக்கும் ஊழியர் சேமநிதி (இபிஎப்) செலுத்த வேண்டும் என்று அரசாங்கம் கூறியிருக்கிறது. தனியார் நிறுவனங்களில் பணி செய்யும் பணியாளர்களின் ஊதியத்தை அவர்களின் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யலாம். ஆனால் உணவகப் பணியாளர்களுக்கு அவர்கள் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்வது சிரமமான காரியமாகும்.
அதனால் அவர்களின் பங்கினையும் உணவக உரிமையாளர்களே செலுத்த வேண்டி இருக்கும் என்றார் அவர். அந்நியத் தொழிலாளர்களுக்கு இபிஎப் திட்டத்தை அரசாங்கம் அறிமுகப்படுத்தி இருப்பதை வரவேற்கும் அதே வேளை அவர்களுக்கான வயது வரம்பை 60 ஆக அரசாங்கம் அதிகரிக்க வேண்டும் என்று டத்தோ அலி மாஜு வேண்டுகோள் விடுத்தார்.