குரோஷியா: குரோஷியாவின் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஆரய்ச்சியாளர் ஒருவர் தனக்கு தானே வைரஸை செலுத்தி சிகிச்சை மேற்கொண்டு நோயில் இருந்து முழுமையாக மீண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் புற்றுநோய் தொடர்பான ஆராய்ச்சிகள் தொடர்ந்து வரும் நிலையில் குரோஷிய நாட்டை சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஒருவர் தனது உடலையே ஆராய்ச்சிக்கு பயன்படுத்தி உள்ளார்.
மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இரு மார்பகங்களையும் நீக்கிய பேட்டா ஹாலஸ்ஸி என்பவருக்கு மீண்டும் நோய் தொற்று ஏற்பட்டது. இந்த முறை வழக்கான கீமோ தெரபி சிகிச்சையை மேற்கொள்ளாமல் வேறு வழியை அவர் தேர்ந்தெடுத்தார். வைரஸ் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்த ஹாலஸ்ஸி வேறு நோய்களை உண்டாக்கும் வைரஸை தன்னுடைய உடலில் செலுத்தி நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் முறையை மேற்கொண்டார்.
அதன்படி புற்றுநோய் பாதித்த உடல் பாகத்தில் இரண்டு மாதங்களுக்கு வைரஸ் செலுத்தப்பட்டது. சில நாட்களில் அவரது புற்றுநோய் கட்டி இலகுவானதுடன், தசையில் இருந்தும் பிரிந்துள்ளது. பின்னர் அறுவை சிகிச்சை மூலம் அந்த கட்டியை மருத்துவர்கள் நீக்கி உள்ளனர். அதன் பின்னர் 4 ஆண்டுகளாக அவர் புற்றுநோய் பாதிப்பின்றி வாழ்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Oncolytic virotherapy என்ற இந்த சிகிச்சையை தோல் புற்றுநோய்க்கு மட்டும் மேற்கொள்ள அமெரிக்காவில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஹாலஸ்ஸி நோயில் இருந்து மீண்டு வந்தாலும் மிகவும் ஆபத்தான முறையை கையாண்டதாக மருத்துவ வட்டாரங்கள் கூறுகின்றன.








