மனிதராக பிறந்த ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான ஆசைகளும், வேண்டுதல்களும் இருக்கும். குழந்தைகளுக்கு பொம்மை மீது விருப்பம் இருப்பது போல, பெரியவர்கள் ஆனதும் பலவற்றின் மீது ஆசைகளும் நல்ல வேலை கிடைக்க வேண்டும், நல்ல தொழில் அமைய வேண்டும், வீடு கட்ட வேண்டும், கல்யாணம் நடத்த வேண்டும், குழந்தை பாக்கியம் வேண்டும் என்று எவ்வளவோ வேண்டுதல்களை வரமாக கேட்பவர்களுக்கு இந்த சங்கு பூ எந்த வகையில் உதவி செய்கிறது? என்னும் ஆன்மீகம் சார்ந்த தகவல்களைத் தான் காண இருக்கிறோம்.
வேண்டுதல்களையும், ஆசைகளையும் பரிபூரணமாக நிறைவேற்றும் சக்தி இந்த சங்கு பூவிற்கு உண்டு. நீல நிற சங்குப்பூ மிகவும் விசேஷமானது. நீலகண்டராக இருக்கக் கூடிய எம்பெருமான் ஈசனுக்கு உகந்த பூவாகும். நீல நிற சங்குப் பூ நீல நிற பாற்கடலை குறிப்பதால், ஸ்ரீமன் நாராயண விஷ்ணுவிற்கும் பிடித்தமான பூவாகும். அது மட்டுமல்லாமல் நீல நிறத்தில் தன் திருமேனியை கொண்டுள்ள ஸ்ரீ கிருஷ்ணருக்கும் விருப்பமான பூ இது தான். கருநீலமாக காட்சியளிக்கும் சனீஸ்வரருக்கும் இது தான் உகந்த பூவாகும்.
இந்த நால்வரும் சங்கு பூவில் வாசம் செய்வதாக ஐதீகம் உண்டு. நீல நிற சங்கு பூவில் விசேஷமான மருத்துவ குணங்களும் அடங்கியுள்ளது. சங்குப்பூவில் தேநீர் செய்து சாப்பிட்டு வருபவர்கள், பலவிதமான உடல் நோய்கள் தீரும். சங்குப்பூ அர்ச்சனைக்கும் உகந்ததாகும். விநாயகருக்கு சங்கு பூவால் அர்ச்சனை செய்வார்கள். நீல நிற சங்குப்பூ வீட்டில் வளர்த்தால் சகல விதமான யோகங்களும் வரும் என்பது நம்பிக்கை.

சங்கு பூவை வீட்டில் தோட்டம் இருப்பவர்கள் வடகிழக்கு திசையில் வளர்த்து வந்தால் பண ரீதியான தடைகள் எதுவும் இல்லாமல் இருப்பார்கள். குடும்பத்தில் அடிக்கடி சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். சங்குப் பூவைக் கொண்டு செவ்வாய்க் கிழமைகளில் மகாலட்சுமிக்கு அர்ச்சனை செய்ய எல்லா ஐஸ்வர்யங்களும் வந்து சேரும் என்பது நம்பிக்கை. தொழில் ரீதியான தடைகள் நீங்க, சங்கு பூவை கொண்டு சிவலிங்கத்திற்கு அர்ச்சனை செய்யுங்கள்.
இந்த சங்குப்பூ அவ்வளவாக வாசனை கொண்டிருக்காது. சங்கு பூ பார்ப்பதற்கு ரொம்பவும் ரம்யமாக இருக்கும். இந்த பூவை பணம் இருக்கும் இடத்தில் வைத்தால் பணம் இரட்டிப்பாகும். தெய்வீக அம்சம் பொருந்தியதால் சங்குப்பூ செல்வத்திற்கு அதிபதியான குபேர அந்தஸ்தை பெற்று தரக்கூடியது. எப்போதும் வீட்டில் பணம் இருக்கும் இடங்களில் ஓறிரண்டு சங்கு பூவை போட்டு வையுங்கள். கொஞ்சம் மல்லிகை மலர்களையும் போட்டு வைக்க வேண்டும். மல்லிகை மகாலட்சுமி அம்சத்தையும், சங்குப்பூ மகாவிஷ்ணுவின் அம்சமாகவும் திகழ்கிறது.
திங்கட்கிழமை மற்றும் பிரதோஷ நாட்களில் குறிப்பாக சனி பிரதோஷங்களில் சங்கு பூவை கொண்டு சிவபெருமானுக்கு அர்ச்சனை செய்து வர, வேண்டிய வரம் வேண்டிய படி கிடைக்கும். நம் ஆசைகளும், கனவுகளும் நிறைவேறும். நீங்கள் எதிர்பார்த்த எல்லாவற்றிலும் ஜெயித்து காட்டுவீர்கள். என்ன வரம் கேட்டு இறைவனிடம் வேண்டிக் கொள்கிறீர்களோ, அந்த வரம் அப்படியே கிடைப்பதாக ஒரு நம்பிக்கை உண்டு. அவ்வளவு சக்தி படைத்ததாக இருக்கக் கூடிய இந்த நீல நிற சங்கு பூவை பார்த்தால் விட்டு விடாதீர்கள், பூஜைக்கு வாங்கி வந்து பயன்படுத்துங்கள்.




















