சிரியா: அரசு படைகள் நடத்திய தாக்குதலில் 340 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழப்பு – பகீர் தகவல்

சிரியாவில் அரசுக்கு ஆதரவான படைகளுக்கும், முன்னாள் அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆதரவாளர்களுக்கும் இடையே நேற்று முன்தினம் முதல் மோதல் நடந்து வலுத்துள்ளது.

கடந்த டிசம்பர் மாத தொடக்கத்தில் ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் அமைப்பின் தலைமையிலான கிளர்ச்சிக் குழுக்களால் அசாத்தின் அரசாங்கம் கவிழ்க்கப்பட்டதிலிருந்து இரு தரப்பினருக்கும் இடையே மோதல்கள் நிகழ்ந்து வருகின்றன.

இந்நிலையில் நேற்று முன் தினம் முதல் மோதல் தீவிரமடைந்துள்ளது. சிரியாவின் கடலோர மாகாணமான லடாகியாவில் உள்ள ஜப்லே நகரில் நேற்று வன்முறை வெடித்தது. அங்குள்ள மூன்று கிராமங்களில் ஆயுதமேந்திய ஆசாத் ஆதரவு குழுவினரை அரசு ஆதரவு படைகள் வெளியேற்ற முயன்றனர். அப்போது நடந்த மோதலில் 70 பேர் கொல்லப்பட்டதாகக் கூறப்பட்டது.

இந்நிலையில் சிரிய அரசு ஆதரவு படையினரும் அதனுடன் தொடர்புடைய ஆயுதக் குழுக்களும் கடந்த இரண்டு நாட்களில் 340க்கும் மேற்பட்ட பொதுமக்களைக் கொன்றனர் என்று பிரிட்டனை தளமாகக் கொண்ட சிரிய மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

அவர்களில் பெரும்பாலோர் அந்நாட்டில் உள்ள அலவைட் சிறுபான்மை இனத்தை சேர்ந்தவர்கள் என்று சிரிய மனித உரிமைகள் கண்காணிப்பக அதிகாரி ராமி அப்துல் ரஹ்மான் இன்று (சனிக்கிழமை) ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here