இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேற்று ஈரான் அதிபர் டாக்டர் மஸுத் பெஷஸ்கியானுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார். ஈரானின் நடப்பு நிலவரம் குறித்து இந்தியப் பிரதமருக்கு ஈரான் அதிபர் விளக்கம் அளித்தார். இப்பிரதேசத்தின் அண்மைய நிலவரங்கள் குறித்தும் அவர் தனது கருத்தைப் பகிர்ந்து கொண்டார். இப்பிரதேசத்தின் பாதுகாப்பு நிலவரம் தொடர்பில் பிரதமர் மோடி தனது ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துக் கொண்டார்.
பேச்சுகள், அரச தந்திர வழிகள் மூலமாக அனைத்துப் பிரச்சினைகளும் தீர்க்கப்பட வேண்டும் என்பதில் இந்தியா உறுதியுடன் உள்ளது என்றும் மோடி தெரிவித்துள்ளார். ஈரான் உள்ளிட்ட இப்பிரதேசத்தில் இந்தியப் பிரஜைகளின் பாதுகாப்பு, நலன் மீது இந்தியா முக்கியத்துவம் அளித்து வருவதை பிரதமர் சுட்டிக்காட்டி இருக்கிறார். அதேசமயம் எரிபொருள், அத்தியாவசியப் பொருட்கள் விநியோகத்தில் எந்த இடையூறும் இருக்கக்கூடாது என்பதிலும் இந்தியா உறுதியாக உள்ளது என்று பிரதமர் கூறியிருக்கிறார்.









