ஹார்மூஸ் ஜலசந்தி விவகாரம்; பாரசீக வளைகுடா பகுதியில் 22 இந்திய கப்பல்கள் தேக்கம்

புதுடெல்லி ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடந்த பிப்ரவரி 28-ந்தேதி கடுமையாக தாக்கின. தொடர்ந்து நடந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

ஈரானும் பதிலுக்கு அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அதன் தளங்கள் அமைந்த பகுதிகள் மீது கடுமையாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, உலக நாடுகளுக்கு சரக்கு கப்பல் செல்ல கூடிய முக்கிய ஹார்மூஸ் ஜலசந்தியை ஈரான் மூடியது. மீறி செல்லும் கப்பல்கள் தாக்கப்படும் சூழல் காணப்படுகிறது. இதனால், கப்பல்களில் பணியாற்றும் பல்வேறு நாடுகளை சேர்ந்த ஊழியர்கள் தாக்கப்படும் சம்பவங்களும் நடந்து வருகின்றன.

ஈரானை ஒட்டியுள்ள பாரசீக வளைகுடா பகுதியில், இந்திய கொடியுடன் கூடிய 28 கப்பல்கள் நிறுத்தப்பட்டு உள்ளன. அவற்றில் 24 கப்பல்கள் ஈரானின், ஹார்மூஸ் ஜலசந்திக்கு மேற்கே உள்ளன. அதில், 677 இந்திய பணியாளர்கள் உள்ளனர். இதேபோன்று 4 கப்பல்கள் ஹார்மூஸ் ஜலசந்திக்கு கிழக்கே நிறுத்தப்பட்டு உள்ளன. அதில், 101 இந்திய பணியாளர்கள் உள்ளனர் என தெரிய வந்துள்ளது. கடந்த 3 நாட்களாக இதே நிலை நீடிக்கிறது. இன்றும் அதே பகுதியில் அவை நிறுத்தப்பட்டு இருந்தன.

இந்த நிலையில், ஹார்மூஸ் ஜலசந்தியில் கியாஸ் சிலிண்டர் ஏற்றி வந்த, இந்திய கொடியுடன் கூடிய 2 கப்பல்களுக்கு ஈரான் அனுமதி அளித்துள்ளது. இதனை தொடர்ந்து, ஹார்மூஸ் ஜலசந்தியை ஷிவாலிக் மற்றும் நந்தா தேவி ஆகிய இரு கப்பல்களும் கடந்துள்ளன.

அந்த கப்பல்களில் 92,700 டன் எடை கொண்ட எல்.பி.ஜி. எனப்படும் திரவ நிலையிலான பெட்ரோலியம் கியாஸ் உள்ளது. 2 கப்பல்களும் முறையே 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் இந்தியாவுக்கு வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவை முந்த்ரா மற்றும் கண்ட்லா துறைமுகங்களை வந்தடையும்.

இதுதவிர, இந்திய கொடியுடன் கூடிய 22 கப்பல்கள், மொத்தம் 611 கப்பல் பணியாளர்களுடன் உள்ளன. இதில் ரசாயனம், சரக்கு உள்ளிட்ட 6 சமையல் எரிவாயு கப்பல்கள், 1 இயற்கை எரிவாயு கப்பல், 4 கச்சா எண்ணெய் கப்பல்கள் பாரசீக வளைகுடாவில் தேங்கியுள்ளன. இதனை மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்ட தகவல் தெரிவிக்கின்றது.

எனினும், ஹார்மூஸ் ஜலசந்தியை ஈரான் தன்வசம் கைப்பற்றி வைத்துள்ள பாரசீக வளைகுடாவில் உள்ள அனைத்து இந்திய பணியாளர்களும் பாதுகாப்பாக உள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில், எந்த அசம்பாவித சம்பங்களும் நடைபெறவில்லை என மத்திய அரசு தெரிவித்து உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here