என்னிடம் அதிகப் பணம் இல்லை, ஆனால் யாராவது உதவி கேட்டால் சமயம், இனப் பாகுபாடின்றி அவர்களுக்கு உணவு கொடுக்க நான் எப்போதும் தயாராக இருப்பதாக பி.என். மகாலட்சுமி கூறினார். தனது அன்பால் குடும்பத்திற்கும் அண்டை அயலாருக்கும் ‘சின்னக்கா’ என்ற டிக்டொக்கில் சமைக்கும் காணொலியால் அனைவராலும் விரும்பப்படுபவர் மகாலட்சுமி.
அண்மையில் தாமான் ஸ்ரீ குளுவாங், குளுவாங் ஜோகூரில் உள்ள தனது வீடமைப்புப் பகுதிக்கு அருகே குடியிருக்கும் மூதாட்டிக்கு இவர் உதவிய காட்சி வைரலானது. பத்து பகாட் ஜோகூரைப் பூர்வீகமாகக் கொண்ட இவர் துப்புரவுப் பணியாளராக வேலை செய்கிறார். அதன் மூலம் கிடைக்கும் சம்பளத்தில் ஒவ்வொரு மாதமும் இந்த மூதாட்டிக்கு அவர் உணவு வாங்கிக் கொடுத்து வருகிறார்.
அந்த மூதாட்டி மலாய்ச் சமூகத்தைச் சேர்ந்தவர். ஆனால் வெவ்வேறு சமயம், இனமாக இருந்தாலும் அந்த மூதாட்டிக்கு உதவி வருகின்றேன். 2021ஆம் ஆண்டு முதல் அவரை எனக்குத் தெரியும் என்றும் அவர் கூறினார்.
மேலும் எனது குடியிருப்புப் பகுதியில் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கும் பல்வேறு இனங்களைச் சேர்ந்த என் தோழிகளின் பிள்ளைகளுக்கும் அடிக்கடி உணவு வாங்கிக் கொடுக்கின்றேன் என்றும் அவர் கூறினார்.









