சீன தலைநகர் பெய்ஜிங்கில் உள்ள மலேசியத் தூதரகத்தில் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சர் உன்னி சங்கர் ரவி சங்கர், 2026ஆம் ஆண்டுக்கான ஐகான்ஸ் ஆஃப் சேஞ்ச் இண்டர்நேஷனல் அவார்ட்ஸ் எனப்படும் உயரிய விருதைப் பெற்ற முதல் மலேசியராக வரலாறு படைத்திருக்கின்றார். வலிமை மிக்க மேம்பாடுகளுக்கு சிறந்த பங்களிப்பை வழங்கும் தனிநபர்களுக்கும் அமைப்புகளுக்கும் வழங்கப்படும் உலக அங்கீகாரமாக இந்த விருது திகழ்கிறது. ஐநா சபை அங்கீகரித்திருக்கும் 2026 வலுவான வளர்ச்சிக்கான அனைத்துலக தன்னார்வலர் ஆண்டை முன்னிட்டு இந்த விருது அவருக்கு வழங்கி சிறப்பிக்க பெற்றது.
உலகம் முழுவதும் சமூகங்கள், தொழில்துறைகளைக் கடந்து மிகச்சிறந்த தலைமைத்துவத்தையும் படைப்பாற்றலையும் கொண்டு வந்து சிறந்த உருமாற்றத்திற்கு வழி வகுக்கும் தனிநபர்களுக்கும் அமைப்புகளுக்கும் வழங்கப்படும் உலகளவிலாய கௌரவமாக இது திகழ்கிறது. இந்த ஆண்டு உன்னி சங்கருக்கு இந்த விருது கிடைக்கப்பெற்றுள்ளது. மலேசியாவுக்கும் சீனாவுக்கும் இடையே இருவழி பொருளாதார வர்த்தக உறவுைைள வலுப்படுத்துவதற்கு பொறுப்பேற்றுள்ள உன்னி சங்கருக்கு இந்த விருது கிடைத்திருக்கிறது.
இவர் பெய்ஜிங்கில் உள்ள மலேசிய தூதரகத்தில் நியமிக்கப்படுவதற்கு முன்பு முதலீடு, வர்த்தகம், தொழில் துறை அமைச்சின் சீனா, ஐரோப்பா 11 ஆகிய மண்டலத்திற்கான இயக்குநராக சேவையாற்றினார். சீனா, ஹாங்காங், தைவான், மக்காவ், ஐரோப்பிய ஒன்றியம், சில மேற்கு ஐரோப்பிய நாடுகளுடன் பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவதில இவர் முக்கியப் பங்காற்றினார்.
இது எனக்கு கிடைத்த மிகப் பெரிய கௌரவம் உன்னி சங்கர் விருதை பெற்றுகொண்ட நிகழ்ச்சியில் பேசினார். அனைத்துலக ஒத்துழைப்பை வலுபடுத்த நான் மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு அங்கீகாரமாக இந்த விருது அமைந்திருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார். பெருமையுடனும் நன்றியுடனும் இந்த விருதை பெற்றுக்கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். நாடுகளுக்கு இடையே அர்த்தம் நிறைந்த உறவுகளை வலுப்படுத்துவதில் முனைப்புக்காட்டி வரும் எனக்கு இந்த அங்கீகாரம் மிகவும் அர்த்தம் நிறைந்தது என்று அவர் குறிப்பிட்டார்.
மலேசியாவும் சீனாவும் பசுமை மேம்பாடு, புதிய எரிசக்தியிலான வாகனங்கள், புதுப்பிக்கக் கூடிய எரிசக்தி, தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் அணுக்கமாக ஒத்துழைத்து வருவதாகவும் உன்னி சங்கர் தெரிவித்தார். 2030ஆம் ஆண்டு மலேசிய புதிய தொழில்மய பிரதான திட்டத்திலும் 13ஆவது மலேசியத் திட்டத்திலும் நான் நேரடியான கடமையை ஆற்றி வருகிறேன் என்றும் அவர் தெரிவித்தார். புத்தாக்கம், வேலை வாய்ப்புகளை உருவாக்குதல், தாக்குப் பிடிக்கும் தன்மை கொண்ட விநியோகம் ஆகிய திட்டங்கள் அவற்றுள் அடங்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மொழியாக்கம்: எம்.எஸ்.மலையாண்டி









