பெராங் – கடந்த ஜூன் 29ஆம் தேதி தமிழ்நாடு, சென்னையில் கடத்தப்பட்டதாகக் கூறப்பட்ட மலேசியப் பெண், பாதுகாப்பாக நேற்று முன்தினம் கண்டுபிடிக்கப்பட்டார். அவரை மலேசியாவுக்கு அழைத்து வர ஏற்பாடு நடக்கிறது.
ஹபிபுனிஸா முகமட் இஸ்மாயில் (வயது 36) ஒரு நபரால் சென்னையில் கடத்தப்பட்டார். எனினும் அப்பெண்ணின் குடும்பத்திடமிருந்து 10,000 வெள்ளி பிணைப்பணம் பெறுவதில் தோல்வி கண்ட அந்நபர், பின்னர் அப்பெண்ணை விடுவித்தார்.
விடுவிக்கப்பட்டதும் அப்பெண் சென்னையில் உள்ள மலேசியத் தூதரக அலுவலகத்திற்குச் சென்று உதவி நாடினார். சென்னை போலீசாரிடம் அவர் 5 மணி நேரம் வாக்குமூலம் அளித்தார்.அப்பெண்ணைக் கடத்தி, அடைத்து வைத்திருந்த நபர், அவரை விடுவித்து விட்டதாக மலேசிய இந்திய மக்கள் கட்சியின் தலைவர் டாக்டர் எஸ்.சந்திரசேகரன் கூறினார்.
கடத்தப்பட்ட பெண்ணை மீட்க டாக்டர் சந்திரசேகரன் மத்தியஸ்தராகச் செயல்பட்டார்.மனைவி கடத்தல்காரன் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டது குறித்து மகிழ்ச்சி அடைவதாக அப்பெண்ணின் கணவர் மாமுட் ரஹ்மான் ஷரீப் கூறினார்.
இந்த விஷயத்தில் உதவிய மலேசிய அரசுக்கும் இந்திய அரசுக்கும் மற்ற அனைத்து தரப்பினருக்கும் அவர் நன்றி தெரிவித்துக் கொண்டார்.