நிறுவனங்களுக்கான வரி குறைக்கப்பட்டது வரலாற்று சிறப்புமிக்க நடவடிக்கை;

புதுடெல்லி – நிறுவனங்களுக்கான வரி குறைக்கப்பட்டது வரலாற்று சிறப்புமிக்க நடவடிக்கை என்று பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். வெளிநாட்டவர்கள் இந்தியாவில் முதலீடு செய்ய வரி குறைப்பு நடவடிக்கை உந்துதலாக அமையும் என்று பிரதமர் மோடி தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். நாட்டின் பொருாளதாரத்தை மீட்டெடுக்க மத்திய அரசு அதிரடியாக வரிச்சலுகைகளை அறிவித்துள்ளது. இதனால் அரசுக்கு ரூ.1.45 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என்றும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஜி.எஸ்.டி. கவுன்சிலின் 37.வது கூட்டம் தொடங்கும் முன்பு கோவாவில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இது தொடர்பாக அவசர சட்டங்கள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறினார். தொழில் உற்பத்தி துறையில் அக்டோபர் 1-ம் தேதிக்கு பிறகு தொடங்கப்படும் புதிய நிறுவனங்களுக்கு வரியை 15 சதவீதமாக நிர்ணயிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

வருமான வரி சட்டத்தில் திருத்தம் செய்ததின் மூலம் பல்வேறு சலுகைகளை நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். உள்நாட்டு நிறுவனங்களுக்கு 22 சதவீதம் மட்டும் வருமான வரி நிர்ணயம் செய்யப்படும் என்று அவர் கூறியுள்ளார். ஒரு நிறுவனத்தின் பங்குகளை வாங்கி விற்கும் போது கிடைக்கும் லாபம் மீதான வரி மீது சர்ஜார்ஜ் ரத்து செய்யப்படும் என்று நிர்மலா சீதாராமன் அறிவித்தார். இந்நிலையில் இந்த நடவடிக்கை எடுத்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

அதில் நிறுவனங்களுக்கான வரி குறைக்கப்பட்டது வரலாற்று சிறப்புமிக்க நடவடிக்கை என்றும், வெளிநாட்டவர்கள் இந்தியாவில் முதலீடு செய்ய வரி குறைப்பு நடவடிக்கை உந்துதலாக அமையும் என்றும் மோடி பாராட்டியுள்ளார். மேலும் வேலைவாய்ப்பு பெருகவும், நிறுவன வரி குறைப்பு உதவும் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்தியாவில் தொழில் தொடங்குவதற்கு ஏற்ற நாடு என்ற சூழலை உருவாக்க அரசு எல்லா நடவடிக்கையும் எடுத்து வருவதாகவும், சமுதாயத்தின் அனைத்து தரப்பினருக்கும் வாய்ப்புகளை உருவாக்குவதே தமது அரசின் லட்சியம் என்று பிரதமர் மோடி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here