கோலாலம்பூர்,
தீயணைப்பு வீரர் முகமட் அடிப் முகமட் காசிமின் மரண விசாரணைக்கு உதவும் வகையில், விளக்கத்தை பெறுவதற்காக அழைக்கப்படவுள்ள 7 முதன்மை சாட்சியாளர்களிடம் பொய்களைக் கண்டறியும் கருவி (பாலிகிராஃப் சோதனை) பயன்படுத்தப்படவுள்ளதாக போலீஸ் தெரிவித்துள்ளது.
அந்த 7 பேரும், கடந்தாண்டு நவம்பர் 27ஆம் தேதி சிலாங்கூர், சுபாங் ஜெயா யூ.எஸ்.ஜே 25-இல் உள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்திற்கு வெளியே நிகழ்ந்தபோது, அங்கு இருந்ததாக புக்கிட் அமான் குற்றப்புலனாய்வு துறையின் இயக்குநரான ஹூசிர் முஹம்மட் தெரிவித்தார்.
இதற்கு முன்பு, 30 சாட்சியாளர்களில் 28 பேரிடம் போலீஸ் விளக்கத்தைப் பதிவு செய்துள்ளது. மேலும், புக்கிட் அமானுக்கு வந்திருந்த கோலாலம்பூர் மருத்துவமனையின் 2 நோயியல் நிபுணத்துவ மருத்துவர்களிடம் விளக்கம் பதிவு செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார்.
விளக்கம் அளித்த 28 பேரில் 7 பேர் முதன்மை சாட்சிகளாவர். அந்த 7 பேரில் சிலரை மீண்டும் விளக்கம் அளிக்க அழைப்போம். அவர்கள் கூறுவது உண்மையா இல்லையா என்பதை உறுதி செய்ய பொய்களைக் கண்டறியும் கருவி பயன்படுத்தப்படுமென ஹூசிர் முஹம்மட் குறிப்பிட்டார்.