கோலாலம்பூர் –
மலேசியர்கள் அனைவரும் ஒருமைப்பாட்டையும் ஒத்துழைப்பையும் மேலும் வலுப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று மாட்சிமை தங்கிய மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாத்துடின் அல்-முஸ்தாபா பில்லா ஷா வேண்டுகோள் விடுத்தார்.
இதன்மூலம் 2020இல் நாடு நீடித்த சுபிட்சத்தையும் அமைதியையும் நிலைநாட்ட முடியும். அதே சமயம் நாட்டின் இறையாண்மையையும் நிலைநிறுத்த முடியும் என்று அவர் குறிப்பிட்டார்.
புத்தாண்டில் இனப்பாகுபாடுகளை முற்றாக நீக்க வேண்டும். நாட்டின் ஒருமைப்பாடு, அமைதி, நாட்டை நேசிக்கும் உணர்வுக்காக மக்கள் வலுவான ஒத்துழைப்பை ஏற்படுத்திக்கொள்ள வேண்டுமென்று அவர் வேண்டுகோள் விடுத்தார்.
கடந்தாண்டில் நாமும் நமது நாடும் பெற்ற அனைத்து வெற்றிகளுக்காகவும் ஒருமைப்பாட்டுக்காகவும் சுபிட்சத்திற்காகவும் நாம் இறைவனுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம் எனவும் அவர் சொன்னார். கடந்தாண்டு நாம் கடந்து வந்த அனைத்து சம்பவங்கள், சவால்களில் இருந்து நாம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். இதன்மூலம் நம்மையும் நமது குடும்பத்தாரையும் நமது சமூகத்தையும் நமது நாட்டையும் தொடர்ந்து மேம்படுத்திக் கொள்ள முடியும் என்று இஸ்தானா நெகாரா வெளியிட்ட அறிக்கையில் மாமன்னர் வலியுறுத்தினார்.