கோலாலம்பூர் –
அமெரிக்காவின் அதிரடித் தாக்குதலில் இரண்டு முக்கிய ராணுவத் தலைவர்கள் கொல்லப்பட்டிருக்கும் சம்பவம் பெரும் கவலையை அளிக்கிறது என்று வெளியுறவு அமைச்சரகம் கூறியது.
கடந்த வாரம் வெள்ளிக்கிழமை ஈராக்கியத் தலைநகர் பாக்தாத்தில் உள்ள அனைத்துலக விமான நிலையத்திற்கு அருகே அமெரிக்க விமானங்கள் சரமாரித் தாக்குதல்களைத் தொடுத்தன.
இச்சம்பவத்தில் ஈராக்கியப் புரட்சிப்படைத் தளபதி அபு மாஹ்தி உயிரிழந்தார். மேலும் அந்த விமான நிலையத்திற்கு அருகே தமது ஆதரவாளர்களுடன் வந்துகொண்டிருந்த ஈரானிய ராணுவ உளவுத்துறைத் தளபதி மேஜர் ஜெனரல் காசிம் சுலைமானும் கொல்லப்பட்டார்.
இச்சம்பவம் காரணமாக அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் பெரும் மோதல் நிலவுகிறது. இது மத்திய கிழக்கு வட்டாரத்தில் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்தச் சம்பவம் தொடர்பாக நிலவும் பதற்ற நிலையை அமைதியாகவும் சுமுகமாகவும் தீர்த்துக் கொள்ள வேண்டுமென்று வெளியுறவு அமைச்சரகம் கேட்டுக்கொண்டது.










