சீனாவில் மர்ம நோய்க்கிருமிகள்; இன்று அவசரக் கூட்டம்

பெய்ஜிங் –

கொரோனா வைரஸ் எனப்படும் புதிய நோய்க்கிருமிகள் சீனாவில் மேலும் பல நகர்களுக்குப் பரவியிருக்கும் வேளையில், அந்நோயினால் மரணமடைந்தோரின் எண்ணிக்கை நான்காக உயர்வு கண்டுள்ளது. அந்நோய்க் கிருமிகள் சீனாவுக்கு அப்பாலும் பரவலாம் என்பதால், நாடுகளுக்கிடையே பயணக் கட்டுப்பாடுகளை அமல்படுத்தலாமா கூடாதா என்பதை விவாதிக்க ஐ.நா. சபையின் உலகச் சுகாதார நிறுவனம் இன்று அவரக் கூட்டம் நடத்துகிறது.

ஜெனிவா நகரில் உலகச் சுகாதார நிறுவனத்தின் தலைமையகத்தில் அந்த அவசரக் கூட்டம் நடைபெறுகிறது. அந்நோய்க்கிருமிகள் ஒருவரிடமிருந்து மற்றவருக்குப் பரவும் தன்மை கொண்டது என்பதை சீன மருத்துவ வல்லுநர்கள் நேற்று உறுதிப்படுத்தினர். இதனால் பல நாடுகள் பீதியடைந்துள்ளன.

சீனாவின் தலைநகர் பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் ஆகியவை உட்பட பல நகரங்களுக்கு அந்நோய் பரவியுள்ளது. ஊஹான் எனும் மத்திய நகரில்தான் அந்நோய் முதலில் பரவியது.

சீனப் புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு கோடிக்கணக்கான மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்புவார்கள் என்பதால் அந்நோய்க்கிருமிகள் மேலும் பலருக்குத் தொற்றலாம் என அஞ்சப்படுகிறது. அந்நாட்டிலிருந்து வெளிநாடு செல்பவர்கள் மூலமாகவும் அந்நோய் பரவலாம் என்பதால் வர்த்தக மற்றும் பயணக்கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து உலகச் சுகாதார நிறுவனத்தின் பேராளர்கள் இன்று விவாதிப்பார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here