குளுவாங் –
தாமான் ஸ்ரீ இம்பியான், குளுவாங்கில் உள்ள தனது வீட்டின் முன்புறம் இடைநிலைப்பள்ளி ஆசிரியர் மூன்று நபர்களால் பாராங்கத்தியால் தாக்கப்பட்டார்.
நேற்றுக் காலை 7.13 மணி அளவில் நிகழ்ந்த இந்தச் சம்பவத்தில் எஸ். ராஜேஸ் (வயது 37) தாக்கப்பட்டதாக குளுவாங் போலீஸ் தலைவர் ஏசிபி முகமட் அப்டு இஸ்மாயில் தெரிவித்தார்.
இவர், குளுவாங் அருகே உள்ள தாமான் சுரியா இடைநிலைப்பள்ளி ஆசிரியர் ஆவார். தலையிலும் கை-கால்களிலும் ஆழமான வெட்டுக் காயத்திற்கு ஆளான இவர், குளுவாங்கில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார்.
இவரைத் தாக்கியவர்கள் முகமூடி அணிந்திருந்தனர். வெள்ளை நிற பெரோடுவா காரில் வந்தவர்கள் அவரைத் தாக்கி விட்டுத் தப்பிச் சென்றனர்.
அவருக்குச் சொந்தமான பொருட்கள் ஏதும் களவு போகவில்லை. பழிவாங்கும் நோக்கில் இந்தச் சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
அங்கு விரைந்து சென்ற தடயவியல் நிபுணர்கள் சம்பவம் நிகழ்ந்த இடத்தில் இரண்டு கைரேகைகளைப் பதிவு செய்தனர்.