ரெம்பாவ் –
சாலை விபத்தில் 2 வயது இந்தியக் குழந்தை நெடுஞ்சாலையில் விழுந்த சம்பவம் தொடர்பில் விசாரணைக்காக இளைஞர் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டார்.
கடந்த திங்கட்கிழமை ரெம்பாவ் அருகே வடக்கு – தெற்கு நெடுஞ்சாலையின் 235.5ஆவது கிலோ மீட்டரில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சத்தியசீலன் என்பவர் தன் குடும்பத்தாருடன் காரில் சென்று கொண்டிருந்தபோது இன்னொரு கார் பலமாக அவருடைய காரை மோதியது. இந்தச் சம்பவத்தில் கார் கண்ணாடி உடைந்த நிலையில் காருக்குள் தன் தாயார் சித்ராவின் அரவணைப்பில் அமர்ந்திருந்த திஷாந்த்ஸ எனும் குழந்தை உடைந்த கண்ணாடி வழியாக நெடுஞ்சாலையின் வலதுபுறத்தில் விழுந்ததால் தந்தையும் தாயாரும் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்தச் சம்பவத்தில் அந்தக் குழந்தைக்குத் தலையிலும் உடலிலும் காயம் ஏற்பட்டிருக்கிறது. குழந்தை நெடுஞ்சாலையில் விழுந்து கிடந்ததைக் கண்ட இதர வாகனமோட்டிகள் வாகனத்தை நிறுத்திய வேளையில் லோரி ஓட்டுநர் ஒருவர் ஓடோடி வந்து அந்தக் குழந்தையைத் தூக்கிச் சென்றார்.
இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலானது.
இந்த விபத்து தொடர்பில் மைவி கார் ஓட்டுநரான 20 வயது இளைஞர் கைது செய்யப்பட்டிருக்கிறார் என்று நெகிரி செம்பிலான் போக்குவரத்துப் புலனாய்வு அமலாக்கத்துறைத் தலைவர் டிஎஸ்பி சைபுலிஷான் சுலைமான் தெரிவித்தார்.
இவரை 14ஆம் தேதி வரை மூன்று நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க ரெம்பாவ் மாஜிஸ்திரேட் நீதிமன்ற மாஜிஸ்திரேட் டான் சை வெய் போலீசுக்கு அனுமதி அளித்தார்.
அந்த நபர் நேற்றுக் காலை 9.30 மணி அளவில் நீதிமன்றத்தில் முன்னிலையானார்.
சத்தியசீலன் செலுத்திய வாகனத்தை பெரோடுவா மைவி கார் மோதியதாகத் தெரிய வருகிறது. சம்பந்தப்பட்ட அந்த இளைஞர் பத்து பெராண்டாம் மலாக்காவில் கைதானார்.